×

எடப்பாடிக்கு பாடம் புகட்ட சசிகலா ரெடி; வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம்

 

மதுரை: அதிமுகவில் சேர இயலாத நிலையில், தான் மட்டும் தனித்து விடப்பட்டதாக எண்ணிய சசிகலா, உடனடியாக ஆதரவாளர்களை சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவிற்கு எதிராக நேரடியாக வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்துள்ளனர். இதன்படி வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளாராம் சசிகலா. இந்த கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பதோடு, முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் போட்டியிடவுள்ள தொகுதிகளையும் அறிவிக்க உள்ளாராம். இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறியதாவது: துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டதாக சசிகலா நினைக்கிறார். தனக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்க சசிகலா முடிவு செய்து விட்டார். அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் தான் உயிர்ப்பித்த நிலையில், தன்னை அரசியலை விட்டே வெளியேற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளதால் கடும் ஆத்திரத்தில் அவர் இருக்கிறார். இதனால், இந்த தேர்தலில் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருமங்கலம் (உதயகுமார் வென்ற தொகுதி), மேலூர், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் நிச்சயம் சசிகலா வேட்பாளர்களை நிறுத்துவார். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 6 தொகுதிகளில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் களத்தில் இருப்பர். நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, போடி, காரைக்குடி, சிவகங்கை, முதுகுளத்தூர், திருவாடானை, சாத்தூர், சிவகாசி, வைகுண்டம், கோவில்பட்டி, நெல்லை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருமயம், புதுக்கோட்டை, ரங்கம் ஆகிய தொகுதிகளில் பட்டியலில் முன்னுரிமையில் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சசிகலா அடையாளம் கண்டுள்ளார். பசும்பொன் கூட்டத்தில் கட்சி அறிவிப்போடு நிற்காமல் போட்டியிடவுள்ள முதல்கட்ட தொகுதிகளின் பட்டியலையும் அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது. சசிகலாவின் இந்த நடவடிக்கை அதிமுகவில் இருக்கும் மாஜி அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்றனர்.

 

Tags : Sasikala ,Madurai ,Atamuga ,Atamuq ,Tamil Nadu ,
× RELATED 1800 புதிய அடுக்குமாடி...