சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து அசோக்குமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், புதிய குற்றவியல் சட்டத்தின்படி குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுக்கும் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும். ஆனால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துள்ளது விதிகளுக்கு முரணானது. எனவே, முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
