தாம்பரம்: இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தூக்க கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவின் முதல் ‘ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை’ சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்க கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூக்கவியல் மையத்தின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்தார். எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இந்நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ‘குறட்டை விடுவது இயல்பானதாக தெரிந்தாலும், நோய் பாதிப்புக்கான இடர்வாய்ப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் அது இருக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தை கெடுப்பதுடன், தம்பதியினர் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தூங்குவது போன்ற பிரிவிற்கும் வழிவகுக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் தூக்கவியல் சிகிச்சைக்கான இந்த புதிய மையம், உடல்நலத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளையும் காக்க உதவும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.
தொடர்ந்து, டாக்டர் ரவி பச்சமுத்து பேசுகையில், ‘இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் தூக்கக் கோளாறுகளை கண்டறிவதிலும், சரியான சிகிச்சை அளிக்கும் முறையையும் இந்த மையம் மாற்றியமைத்துள்ளது. நோயாளிகள் வெவ்வேறு மருத்துவ துறைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் முழுமையான தீர்வுகள் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களையும் இம்மையம் கொண்டிருக்கிறது, என்றார். மையத்தின் இயக்குநர் டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு பேசுகையில், ‘இரவு நேரத்தில் வரும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பெரும்பாலும் தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது. புகைப்பிடிப்பது எப்படிப் புற்றுநோயை உண்டாக்குமோ, அதேபோல் சிகிச்சையளிக்கப்படாத தூக்கக் கோளாறுகள் இதய நோய்க்கும் வழிவகுக்கும். இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு ‘வழிகாட்டி’ நியமிக்கப்பட்டு, பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை நோயாளிகளுக்குத் துணையாக இருப்பார்கள்,’ என்றார்.
