×

6,867 பேர் பயன் பெறுவார்கள் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.2,446 கோடி நிலுவைத்தொகை: தமிழக அரசு அதிரடி அரசாணை

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் மற்றும் இதர நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கும் வகையில், 2,446 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போக்குவரத்து கழகங்களில் நிலுவையில் இருந்த ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி தொழிலாளர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதை பரிசீலித்த அரசு, தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள், இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள், மாநிலம் முழுவதும் மொத்தம் 6,867 பணியாளர்கள் இந்த தொகையை நேரடியாகப் பெறுவார்கள்.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய முக்கியமான மூன்று பலன்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் சேமிப்புத் தொகை, நீண்ட காலப் பணிக்காக வழங்கப்படும் மொத்தத் தொகை, பயன்படுத்தப்படாத விடுப்பு நாட்களுக்கான ஊதியம் ஆகியவற்றிற்கு நிதி வழங்கப்படவுள்ளது. இந்த 2,446 கோடி ரூபாய் நிதியானது தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியப் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி – சென்னை), அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மண்டலப் போக்குவரத்து கோட்டங்கள் ஆகிய போக்குவரத்து பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போக்குவரத்து ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு தொகை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்றைய இந்த மெகா நிதி ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது. இந்த அரசாணை மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...