சென்னையை ஒட்டி உள்ள தொகுதிகளுள் ஒன்று திருப்போரூர். பெரும்பாலும் திமுக வசம் இருந்த இத்தொகுதி தற்போது திமுக கூட்டணியில் உள்ள விசிக வசம் உள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமல்லபுரம் கோதண்டபாணி தற்போது அமமுகவில் உள்ளார். அவர், தனக்கு பாதியிலேயே தகுதி இழப்பு ஏற்பட்டு விட்டதால், இந்த முறை போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று டிடிவி தினகரனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் களத்தில் உள்ளனர். பா.ஜ.சார்பிலும் ஒரு புதுமுகம் இந்த திருப்போரூர் தொகுதியை கேட்டு களத்தில் இறங்கி உள்ளது. இந்த தொகுதியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அழையா விருந்தாளியாக ஆஜர் ஆகும் அவர் முன்னாள் மதுராந்தகம் எம்.எல்.ஏ. காயத்ரிதேவிதான். காங்கிரசில் இருந்து அண்மையில் பாஜவுக்கு வந்த அவர் தனக்கு திருப்போரூர் தொகுதி கட்டாயமாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.
இதனால் தொகுதி முழுவதும் மாலை நேர இலவச டியூசன்களை நடத்துவதாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதை ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான சேவாபாரதி மூலம் நடத்துவதாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். டியூசன் சென்டர் 12ம் வகுப்பு வரை நடத்துவதாக அறிவித்துள்ளார். அவர்களுக்கு ஓட்டே கிடையாது. இதெல்லாம் ஒரு பிளானா என்று பாஜவினரே கேலி செய்ய தொடங்கி உள்ளனர். காயத்ரிதேவி அட்ராசிட்டியால் பாஜவில் நீண்ட நாட்களாக கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இல.கணேசன் காலத்து நிர்வாகியான கேளம்பாக்கம் மோகனராஜாவுக்கு புதுவரவு காயத்ரிதேவியின் இந்த செயல் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகல. அதுக்குள்ள எம்எல்ஏ சீட்டா என தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டுள்ளார். இதனால் தொகுதி முழுவதும் இப்போதே காயத்ரிதேவிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.அல்லது அ.ம.மு.க.வுக்கு திருப்போரூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் தி.மு.க. இந்த தொகுதியில் ஜெயிப்பது எளிதாகி விடும் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
