- சென்னை
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0
- காலநிலை உச்சி மாநாடு
- காலநிலை மாற்ற இயக்கம்
- பசுமைத் தமிழர் இயக்கம்
- தமிழ்நாடு ஈரநில இயக்கம்
- தமிழ்நாடு நெசவு மறுசீரமைப்பு இயக்கம்
சென்னை: சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: காலநிலை உச்சி மாநாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் இவற்றிற்கெல்லாம் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கி வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழு என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் சமீபத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹுவுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இந்த மாநாட்டால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வுகளை ஈடு செய்யக்கூடிய விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆயிரத்து நூறு மரக்கன்றுகள் வனத்துறை மூலமாக நடப்பட்டிருக்கிறது. மற்ற அரசுத் துறைகளும் இந்த பார்முலாவை கடைபிடித்தால், நம்முடைய மாநிலத்தின் ‘கரிம தேக்க’ இலக்கான, 30-35 மில்லியன் டன்களை வேகமாக அடைந்துவிடலாம் நம்முடைய ‘நெட் ஜீரோ’ இலக்குக்கும் இது ஒரு மைல்கல்லாக இருக்கும். 2030ம் ஆண்டுக்குள் மாநில போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில், 30 விழுக்காடு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும். இதுதான் டார்கெட். மின்சார வாகனங்களுக்கு 2027ம் ஆண்டு வரை ரோட் டாக்சிலிருந்து விலக்கு கொடுத்திருக்கிறோம்.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க அமைத்திருக்கும் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்தப்போகிறோம். தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், அரிதான கடல்பசு, கடல் ஆமை, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களைக் காக்க 6 உயர் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட 8 புதிய வனஉயிரின சரணாலயங்கள், 100 புதிய காப்புக் காடுகள், அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை பாதுகாக்க ரூ.50 கோடி நிதி, மனித விலங்கு மோதலை தவிர்க்கவும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் பாதுகாப்புக்கும் ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஏன்? என்று பல்வேறு பல்லுயிரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. அலையாத்தி, சவுக்கு மற்றும் பனைமரங்கள் நடவு செய்யப்பட்டு, கடலோரப் பகுதிகளில், இயற்கைப் பேரிடர்களை தாக்குப்பிடிக்கும் உயிர்க்கேடயங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நெகிழிக் கழிவு மேலாண்மையினை முன்னிறுத்தி, இபிஆர் வலைதளத்தில் பதிவு செய்வதில், இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ‘சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக்’ பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் மூலம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே, அதிகம் நகர்மயமான மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், அது எந்த வகையிலும் நம்முடைய பசுமையை பாதிக்க கூடாது என்று கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம். அதற்காக, நகர்ப்புற பசுமையாக்கலுக்கான கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம், நுண்ணீர் பாசன அமைப்புகள், மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு, உயிர்ம வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை, ஊக்குவிப்பு போன்ற திட்டங்கள் செய்து கொண்டு வருகிறோம். இதுபோன்ற காலநிலை நடவடிக்கைகள் என்றுமே வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததில்லை; நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாகதான் இருந்திருக்கிறது, எனவே, காலநிலை மாற்றத்தின் ஆபத்தை, நிலையான பொருளாதாரம் மற்றும் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இயற்கை வழங்கியிருக்கக்கூடிய ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பொறுப்போடு செயல்படுவோம். காலநிலை மீள்திறன்மிகு உட்கட்டமைப்புகளை உருவாக்க, அரசுத் துறைகள் அனைத்தும் உலக வங்கி, ஆசிய வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து பசுமை நிதியையும், முதலீட்டையும் ஈர்க்க வேண்டும்.
இதன் முதல்படியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமைக் காலநிலை நிதியம் உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தூய்மை மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்துடன் இணைந்து அளப்பரிய ஆதரவை வழங்கி வரும் உலக வங்கிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில், முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன். இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இயைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும்.
நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், கார்பன் உமிழ்வுகளை குறைக்க, தேசிய அளவில், தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டது போல், நம் மாநிலத்தின் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க, 2030க்குள் செயல்படுத்தவேண்டிய மாநில அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இலக்குகளாக கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய ஐந்து லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும். தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும், இளைஞர்கள் காலநிலைத் தலைவர்களாகவும், தூதுவர்களாகவும் உருவெடுக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
