நகரின் மையப்பகுதியான, மைசூர் சாலையில் காலி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலை தரிசித்து செல்கிறார்கள். கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரங்கள் புதிதாக வரையப்பட்டுள்ளன, அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. சுமார், 1425 – ஆம் ஆண்டு, விருஷபாவதி மற்றும் அதன் துணை நதியான பஸ்சிமா வாஹினி ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில், மகான் ஸ்ரீவியாசராஜ தீர்த்தர், காலி ஆஞ்சநேயரை கண்டெடுக்கிறார். தற்போது, விருஷபாவதி – பஸ்சிமா வாஹினி ஆகிய நதிகளை காண முடியாது. காரணம், அவை காலப்போக்கில் கட்டடங்களாக மாறிவிட்டன. கன்னட மொழியில், “காலி’’ (Gaali) என்ற சொல்லுக்கு “காற்று’’ என்று பொருள். பக்தர்கள், துன்பத்தில் இருக்கும்போது தன்னை அழைத்த மாத்திரத்தில், மறுநொடியில் காற்றில் பறந்துவந்து பக்தர்களை காத்து அருள்கிறார். ஆகையால், வாயுபுத்திரனாக இங்குள்ள இறைவனை, “காலி ஆஞ்சநேயர்’’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், “காலி’’ என்ற சொல், தீங்கு விளைவிக்கும் தீய சக்திகளையும் குறிக்கிறது. இங்குள்ள அனுமன், தீய சக்திகளை சுட்டு பொசுக்குவதாலும் இவருக்கு காலி ஆஞ்சநேயர் என்ற பெயர் வந்ததாக வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக, பக்தர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துவந்து அனுமனின் அருளைப் பெறச் செய்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு தீய சக்தியினால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்னைகளும் நீங்குவதாக கூறப்படுகிறது.மைசூர் சாலையின் அருகிலேயே 75 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அழகு தோற்றமாய் கொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததும், வேணு கோபாலர் சந்நதியும், விநாயகர் சந்நதியும் காணப்படுகின்றன. இவர்களை கடந்து சென்றதும், மூலவரான காலி ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். பிற கோயில்களில் நாம் தரிசிக்கும் அனுமன்களைவிட, இவர் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். மேற்கு நோக்கிய காலி ஆஞ்சநேயர், மிக பெரிய அகன்ற கண்களைக் கொண்டவராக காட்சியளிக்கிறார். மேலும், காலி ஆஞ்சநேயரின் உடல் முழுவதிலும் சிந்தூரம் பூசப்பட்டு, பக்தர்களை நேரடியாக நோக்கி அருள்பாலிக்கிறார். காலி ஆஞ்சநேயர், தனது இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டும், வலது கையில் செண்டு பூவைப் பிடித்துக்கொண்டும், வலது இடுப்புக்கு அருகில் ஒரு சிறிய வாள் ஒன்றையும் வைத்துக் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
காலி ஆஞ்சநேயரின் முகம் மிகவும் சாந்தஸ்வரூபியாக, அமைதியாக காட்சியளிப்பதால், இவரை “பிரசன்ன ஆஞ்சநேயர்’’ என்றும், “சாந்த ஞான ஸ்வரூபி’’ என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். காலி ஆஞ்சநேயரின் உதட்டின் மீதுள்ள மீசை, அவரின் அசாத்தியமான வீரத்தை காட்டுகிறது. இவை எங்கும் காண கிடைக்காத அற்புத காட்சியாகும். எப்பவும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட அனுமன்களுக்கு, வால் ஆனது வலது பக்கமாக மேலே சென்று அதில் மணியும் காணப்படும், காலி ஆஞ்சநேயருக்கும் அப்படியே காணப்படுகிறது.மேலும், காலி ஆஞ்சநேயருக்கு இடது பக்கத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீராமசந்திரமூர்த்தியும் அவரோடு லட்சுமணன் மற்றும் சீதாதேவியும் தனி சந்நதிக் கொண்டு பக்தர்களை காத்துவருகிறார்கள்.
இது தவிர, அனுமனின் வலது பக்கத்தில் சத்யநாராயணருக்கு ஒரு தனி சந்நதியும் காணப்படுகின்றன. இந்த காலி ஆஞ்சநேயர் கோயிலில் பிரசாதமாக, அனுமனின் பாதங்களில் வைத்து பூஜிக்க பட்ட ஆரஞ்சு நிற தாயத்தும், செந்தூரமும் வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், சற்று கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 120 ஆண்டுகளாக, சித்திரை மாதத்தில் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் சங்கராந்தி என்னும் விழா முக்கியமானது. அப்போது, ஒரு மாதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 1985 – ஆம் ஆண்டு, ஊர் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட, காலி ஆஞ்சநேய அறக்கட்டளை, கோயிலின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு ஆச்சரியமான சம்பவம் என்னவென்றால், சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகாலில் ஆஞ்சநேயரின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலை தற்போது தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது, என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது: பெங்களூர் – மைசூர் சாலையில், பெங்களூரில் இருந்து சுமார் 7 கி.மீ., தூரத்தில் பயணித்தால் காலி ஆஞ்சநேயர் கோயிலை அடைந்து விடலாம்.
