மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி
சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். சிவன் என்கிற சப்தத்துக்கு பல பொருள்கள் உண்டு. சிவன் என்றால், தமிழில் ‘‘சிவந்தவன்’’ என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
சிவன் – என்ன பொருள்?
சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம்.
1. எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன்
2. ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்.
3. ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.
4. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
5. போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன்.
6. ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் மற்றும் அழித்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்பவன்.
7. ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்.
8. முக்கண் முதல்வன்
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப் பெறுகிறது. சிவவழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலை மகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட்செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.
சிவன் பெருமை பேசும் எட்டுத்தொகை
எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி, கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.
பிற நாடுகளில் சிவன் பற்றிய வியப்பான செய்திகள்
ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது. பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர். ஜப்பானியர்களது புராதனமான கடவுள் சிவோ என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது. பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.
நந்தி தேவர் உருவம்
தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் பற்பல சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம். பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது. எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5-ம் நூற்றாண்டிலேயே வேரூன்றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பாவை, திருவெம்பாவை, விழா நடந்ததாக அறிய முடிகிறது. சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்தி தேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு. சுக்கில யஜீர் வேதமும் சிவபூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றது.
அமெரிக்காவில் குன்றின் மீது ஒரு கோயில்
சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டதை அறிகிறோம். மிகப் பழைய காலமான கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தக்கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பனிக்கட்டி லிங்கம்
ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. டெல்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட திருவாசகம் ஓதப்படுகிறது. இங்கே இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியா ததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள். ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. சுமத்ராவில் சிவன் கோயிலில் அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்தி சிலை ஆகியவை இருக்கின்றன. போர்போநியாவில் உள்ள மலைகுகையில் சிவன், விநாயகர் சிலைகள் உள்ளன. இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன. இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.
வாழ்வின் விடியலை நோக்கும் சிவராத்திரி
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியம். அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாபாரதத்தில் வேத வியாசர் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்கிறார். “எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து, மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ, அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம்” என்கிறார். சிவ தரிசனமும் சிவ நாமமும் பாபங்களை பஸ்பமாக்கி மகத்தான வாழ்க்கையைத்தரும். ‘‘ஓம் நமசிவாய’’ என்ற மந்திரத்தை அன்போடு உச்சரித்தாலே, பல பிறவிகளில் செய்த பாவம் விலகும். அதை இரவு முழுக்க ஓதி, விடியல் எனும் வாழ்வை நோக்கும் வழிபாடே
சிவராத்திரி.
சிவம் உணர்தல்
சிவம், சக்தி இவை இரண்டும் இரட்டைத் தன்மைகள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. அதே சமயத்தில் ஒன்றுக்குள் ஒன்று. இதனுடைய குறியீடுகளே சிவசக்தி தோற்றங்களாக விளங்குகின்றன. சக்தியின் இருப்பிடம் சிவமாகவும், சிவத்தின் வெளிப்பாடு சக்தியாகவும் விளங்கி இந்த பிரபஞ்சம் இயங்கு கின்றது. ராத்திரி என்பது அமைதி. எந்த ஒரு சக்தியும் வெளிப்படும் முன் அமைதியாகத் தான் இருக்கும். ஆனால் அது வெளிப்படத் தொடங்கியவுடன் பல்வேறு பரிணாமத்துடன் இருக்கும். சிவராத்திரி முழுக்க அமைதி தியானம். (meditation) ஆற்றலின் இருப்பு. பிரார்த்தனை. (prayers) அதனுடைய வெளிப்பாடுதான் சக்தியின் வெளிச்சம். அக்னி ஸ்வரூபம். சிவ பரம்பொருளை உணர்தல். (Realisation of sivan)
சிவராத்திரியும் நவராத்திரியும்
நம்முடைய ஆன்றோர்கள் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் (நவராத்திரி)என்று வைத்தார்கள். இதனுடைய காரணத்தை நாம் உணர்ந்து கொண்டாலே சிவசக்தி சொரூபத்தையும், சிவராத்திரியின் தத்துவத் தையும் உணர்ந்து கொள்ள முடியும். சிவம் என்பது உள்முக ஆற்றல். அது வெளிக்குத் தெரியாது. சக்தி என்பது வெளிப்புறச் செயல்பாடுகள். அதைப் பார்க்க முடியும்; அனுபவிக்க முடியும்; உணர முடியும்; உள் முக ஆற்றல் இல்லையேல், வெளிப்புறச் செயல் கிடையாது. அதனால் தான் “சிவம் இல்லையேல் சக்தி இல்லை” என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலை பெற்ற ஆற்றல். சக்தி என்பது வெளிப்படும் ஆற்றல். நிலைபெற்ற ஆற்றல் ஒரே தொகுப்பாக ஒரு நிலையில் மட்டும் இருக்கும். வெளிப்படும் ஆற்றல் ஒன்பது வகையாக வெளிப்படும். இங்கு ஒன்பது என்பது உபச்சாரமாக சொல்லப்பட்ட பெரிய எண்ணாக இருந்தாலும், பல்வேறு பரிணாமங்களுடன் வெளிப்படும் என்று பொருள். அதனால்தான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் வைத்தார்கள்.
நீர்த் தேக்கமும் சிவராத்திரி தத்துவமும்
இதை மிக எளிதாக உணர்ந்து கொள்ள ஒரு சின்ன உதாரணத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீர் தேக்கங்களைப் பார்த்திருப்பீர்கள். அது இரண்டு பகுதிகளாக இருக்கும். மேல் பகுதி (upstream), கீழ் பகுதி(downstream) என்று சொல்வார்கள். நடுவில் அணை கட்டப்பட்டிருக்கும். அணையின் மேல் பகுதியில், கடல் போல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். மிகவும் ஆழமாகவும், அகலமாகவும் உள்ள அந்த தண்ணீர் ஆற்றல், நிலை பெற்றதாக, எந்த அசைவும் இல்லாமல் “சிவமே” என்று இருக்கும். அப்படித் தேக்கி வைக்கப்படுவதற்குக் காரணம், அதை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இப்பொழுது மேல் பகுதி சிவ சொரூபமாக, அமைதியாக, சிவராத்திரி போல் இருக்கிறது. மேல் பகுதி தண்ணீர், அணையைக் கடந்து, கீழ்ப்பகுதியில் ஓடுகின்ற பொழுது, பல்வேறு வாய்க்கால்களாகத் தெரியும். அது பயிர்களை வளர்க்கிறது. உலகை காக்கிறது. தேவைப்பட்டால் மின் சாரத்தை (hydro power) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ சக்திகளாக மாற்றிக்கொண்டு செயல்படலாம். இப்பொழுது அர்த்த நாரீஸ்வரரை நினைத்துக் கொள்ளுங்கள். ஈஸ்வர பாகம் அணையின் மேல் பகுதி. சக்தி பாகம் அணையின் கீழ் பகுதி. ஆனால் இரண்டும் ஒன்று. அந்த ஒன்றை உணர்வது தான் சிவராத்திரி.
சிவபுராணம் உணர்த்தும் சிவராத்திரி தத்துவம்
சிவராத்திரியின் தத்துவத்தை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தின் வழியாகத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார். அதனால் தான் சைவ பெருமக்கள் திருவாசக முற்றோதலை கடைபிடிப்பதோடு, வைணவர்கள் எப்படி திருப்பாவையை நாள்தோறும் தப்பாமல் ஓதுவார்களோ, அப்படி சிவபுராணத்தை ஓதுதலை, தலையாய கடமையாகக் கொள்ளுகின்றனர். சிவபுராணத்தின் தொடக்கமே வாழ்த்துச் செய்தியுடன் தான் தொடங்குகிறது. சிவம் என்ற மங்கலச் சொல்லின் மகத்தான பொருள் “நமசிவாய” என்ற ஐந்து எழுத்தில் தான் நிலை நின்று இயக்குகிறது. நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் மெய்ப்பொருள் தான் சிவராத்திரித் தத்துவம். அதனால்தான் மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தை இப்படித் தொடங்குகிறார்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன்
இறைவ னடிவாழ்க.
படைப்புத் தொழில் தொடங்கிய சிவராத்திரி
சிவராத்திரி புனிதமான தினம். சிவராத்திரியில் பல அற்புதமான செயல்கள் நடந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அன்றுதான் படைப்புத் தொழிலை நான்முகன் தொடங்கியதாக புராணம் கூறுகிறது. இந்திரன் தனது இந்திரப் பதவியை அடைந்ததும் இந்த தினத்தில் தான். வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன், ஐஸ்வரியங்களுக்கு அதிபதியானதும் இந்த தினத்தில் தான். உமாதேவியார், சிவனின் இடது பாகத்தைப் பெற்றதும் இந்த தினத்தில் தான். சிவராத்திரியில் விரதம் இருந்தால் சிவனையே பெறலாம் என்ற தத்துவத்தை உலகிற்கு காட்டியது உமை அம்மையின் சிவராத்திரி தவமும் விரதமும்.
பாசுபதம் பெற்ற சிவராத்திரி
“பாரதப்போரில் வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன வழி?” என்று அர்ஜுனன் யோசிக்கின்ற பொழுது ,பகவான் கிருஷ்ணன் ஒரு வழி சொல்லுகின்றார்.‘‘முக்கண்ணனாகிய சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றி, அவருடைய திருக்கையால் பாசுபதாஸ்திரத்தை வாங்கினால், பாரதப் போரில் வெற்றி பெற லாம்’’. அர்ஜுனனும் ஒற்றைக் காலில் நின்று, பஞ்ச அக்னி வளர்த்து கடுமையான தவமிருக்கிறான். அவன் தவத்தைக் கலைக்க துரியோ தனன், மூகாசுரன் என்ற அசுரனை அனுப்ப, அவன் பன்றி வடிவத்தில் அர்ஜுனனைக் கொல்ல வருகின்றான். அர்ஜுனன் பன்றி மீது அம்பு எய்து கொல்லுகின்றான். அதே நேரத்தில் பார்வதியுடன் வேட உருவில் வந்த சிவபெருமானின் அம்பும் பன்றி மீது விழுகின்றது. “பன்றியைக் கொன்றது யார்?” என்று இருவருக்கும் போட்டி நடக்கிறது. சிவப்பரம்பொருளையே தன்னுடைய வில்லால் அடிக்க முயல்கின்றான் அர்ஜுனன். அந்த அடி மூன்று உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் விழுகின்றது. அப்பொழுது பார்வதி கோபப்படுகிறாள். சிவபெருமான், ‘‘நீ லோகநாயகி, நீ கோபப்பட்டால் இந்த உலகம் தாங்காது. சாந்தமடைவாய்’’ என்று சொல்லி அவருக்கு சற்குணநாயகி என்ற திரு நாமமும் இட, அந்த இடத்தில் தன்னை உணர்த்தி, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்தரம் வழங்குகின்றார் சிவபெருமான். இது நடந்தது, சிதம்பரம் பக்கத்திலே உள்ள திருவேட்களம் என்ற திருத்தலத்தில். இந்த பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் பெற்றது ஒரு சிவராத்திரியில் தான். மகா சிவராத்திரி உற்சவம் இங்கு விஷேசமாகக் கொண்டாடப்படும்.
சிவனுக்கு கண்ணப்பன் கண் தந்த சிவராத்திரி
சிவலிங்கத்தின் கண்களில் குருதி வழிகிறது என்ற காட்சியைக் கண்டு, மனம் கொதித்து, தன்னுடைய கண்களையே தர முன் வந்த திருக்கண்ணப்பனின் பெருமை, இந்த உலகிற்குத் தெரிந்தது சிவராத்திரியில் தான். அதனால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளால், ‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்றும், பட்டினத்தாரால் ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என்றும், திருநாவுக்கரசரால் ‘‘திண்ணன், கண்ணப்பன், வேடன்’’ என்றும் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார். தியாகத்தின் பெருமையை உணர்த்துவது சிவராத்திரி திருநாள் என்பதை கண்ணப்பனின் கதை மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அவர் சிவலிங்கத் திருமேனியை வெறும் கல்லாகக் கருதவில்லை. தன்னுடைய கண்ணாகக் கருதினார். ஒரு குழந்தையைப் போல ஈஸ்வரனை நேசித்தார். அந்த ஈசனை தன்னுடைய காலால் தொட்ட கண்ணப்பனுக்கு தந்த காட்சி, பல காலம் கையால் தொட்டுபூஜை செய்த அந்தணருக்கும் கிடைத்தது என்பது தான் அற்புதம். இந்த அற்புதம் நிகழ்ந்தது ஒரு
சிவராத்திரியில்.
என்றும் பதினாறு
இந்த சிவராத்திரியில் தான் தன்னுடைய தவ சக்தியால் புனிதமான கங்கையை விண்ணில் இருந்து மண்ணுக்கு வரவழைத்தான் பகீரதன். அதனால் முயற்சிகள் வெற்றி பெற சிவராத்திரி வழிபாடும், விரதமும் உதவும். பிறக்கும் பொழுதே,” உனக்கு இவ்வளவு தான் ஆயுள்” என்று மார்க்கண்டேயனுக்கு நிர்ணயித்துக் கொடுத்தான் காலதேவன். பொதுவாகவே மற்ற குறைபாடுகளுக்கு பிராயச்சித்தங்கள் ஜாதகத்தில் சொல்லப்பட்டு இருக் கின்றன. ஆனால், ஒருவனுடைய ஆயுள் நிர்ணயம் என்பது மாறாதது. பெரும்பாலும் ஆயுள் நிர்ணய விஷயத்தில் ஈசன் தலையிடுவதில்லை. காலன் பாசக் கயிறு வீசி வரும் நாளில், தன்னையே அண்டி, தன்னுடைய திருவடிகளை ஒரு குழந்தையைப் போல கட்டிக்கொண்டு கதறிய மார்க் கண்டேயனுக்காக, காலதேவனையே காலால் உதைத்து, ‘‘என்றும் பதினாறு’’ என்ற வரத்தை சிவபெருமான் அளித்தார். அப்படிக் காலனைக் கடிந்ததும் இந்த சிவராத்திரியில் தான். எனவே ஒரு வருடைய மிருத்யு தோஷம் நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும், பெண்கள் தீர்க்க சுமங்கலித்துவம் பெறவும் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏன் மாசி மாதத்தில் சிவராத்திரி?
அது சரி, சிவராத்திரி ஏன் மாசி மாதத்தில் நிகழ்கிறது என்பதைக் கொஞ்சம் யோசிப்போம். மாசி மாதம் என்பது கும்பத்தில் சூரியன் இருக்கின்ற மாதம். சித்திரையில் ஆரம்பித்தால் மாசி மாதம் 11-வது மாதம் அல்லவா. காலச் சக்கரத்தின் 11 வது ராசி கும்ப ராசி. இந்த 11 என்ற தத்துவம் ஏகாதசம் எனப்படும். ஏகம் என்பது ஒன்று. தசம் என்பது 10. இது சிவ தத்துவத்தைக் குறிக்கும் ஏகாதச ருத்ரர்கள் என்று சொல்வதும் உண்டு. ஒன்றுதான் பத்து, நூறு, ஆயிரம் ஆகிறது. மணிவாசகப் பெருமான் சொன்ன “ஏகன், அனேகன்” என்ற தத்துவத்தை இங்கே பொருத்திப் பார்த்தால்,11 என்ற எண்ணின் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம். 11 என்ற எண்ணில் இரண்டு ஒன்று உண்டு. முதல் 1 சிவ தத்துவம். அடுத்த 1 சக்தி தத்துவம். இரண்டையும் கூட்டினால் (2) இரண்டு வரும். அது சிவசக்தி தத்துவம். உமையொரு பாகனாகக் காட்சி தந்ததும் இந்த சிவராத்திரியில் தானே. எனவே சிவராத்திரிக்குரிய மாதமாக 11 வது மாதம் கும்பமாதம் பொருத்தமாக வருகிறது.
கர்ம பலனிலிருந்து விடுபட
நவக்கிரகங்களிலேயே சனிக்கு ஒரு ஏற்றம் உண்டு. பெரும்பாலும் அவர் கஷ்டத்தைத் தரக்கூடிய கிரகம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அவர், ‘‘ஏன் கஷ்டம் தருகிறார்?’’ என்பதைப் பற்றி யாரும் சிந்திக்க மாட்டார்கள். 12 ராசிகளிலே சில கிரகங்களுக்கு இரண்டு ராசிகள் ஆட்சி வீடுகளாகத் தரப்பட்டிருக்கின்றன. செவ்வாய்க்கு இரண்டு ராசிகள் (மேஷம், விருச்சிகம்) புதனுக்கு இரண்டு ராசிகள் (மிதுனம், கன்னி) வியாழனுக்கு இரண்டு ராசிகள், (தனுசு, மீனம்) வெள்ளிக்கு (சுக்கிரனுக்கு இரண்டு ராசிகள் (ரிஷபம், துலாம்) சனிக்கு இரண்டு ராசிகள் (மகரம், கும்பம்). ஆனால் சனிக்கு மட்டும் அடுத்தடுத்த ராசிகள் தரப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மகர ராசியும் கும்ப ராசியும் சனிக்கு உரிய ராசிகள். அதாவது காலச் சக்கரத்தின் பத்தாவது ராசியும் 11-வது ராசியும். சனிக்கு உரிய ராசிகள்.
சிவராத்திரியின் பலன்
பதினோராவது ராசியான கும்பத்தில்தான் சிவராத்திரி வருகிறது என்பதைப் பார்த்தோம். ஒரு ராசியினுடைய பலன், அதற்கு அடுத்த ராசி தரும் என்பது ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். 11வது ராசியில் சிவராத்திரி விரதம் இருக்கின்றோம். அதாவது கும்ப மாதத்தில் சிவராத்திரியில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுகின்றோம். இதனுடைய பலன், அடுத்த ராசியாகிய 12வது ராசியில் கிடைக்கும் 12 வது ராசி குருவுக்கு உரிய ராசி. மோட்ச ராசி. மோட்சம் என்றால் விடுதலை. மோட்சம் என்றால் நிம்மதி. கும்பமாதத்தில் மஹா சிவராத்திரி விரதம் இருந்தால், குருவின் அருளால், (மீனம் குருவின் ராசி), துக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறலாம். வறுமையில் இருந்து விடுதலை பெறலாம். நிறைவாக பிறப்புச் சுழலில் இருந்து விடுதலை பெறலாம். இதைத்தான்,
‘‘கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்’’
என்று மணிவாசகர் சிவபுராணத்தில் சொல்லி இருக்கின்றார்.
கும்பராசியின் பெருமை
கும்பராசி என்பது ஆண் ராசி. ஸ்திர ராசி. ஸ்திரம் என்றால் நிலைத்தது அழியாதது என்று பொருள். சிவம் என்ற தத்துவத்திற்கு அழியாதது என்று பொருள். பஞ்சபூதங்களிலேயே மிக முக்கியமானது காற்று. மூச்சு(காற்று) இல்லா விட்டால் பேச்சு இல்லை. காற்றை உள்ளே செலுத்தி நிலை பெற்றதாக நின்று, உயிர் தத்துவத்தை இயக்குவது பரம்பொருளாகிய சிவம். கும்ப ராசி காற்று ராசி என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். கும்பமாகிய இந்த உடம்பில் காற்றை உள் நிறுத்தி, உள்முக ஆற்றலைப் பலப்படுத்தி, சிவமாகிய தத்துவத்தை உணர்வது தான் சிவராத்திரியின் நோக்கம். நீங்கள் புறப் பார்வையைப் பார்க்கும்போது அகம் இருளடையும். ஆனால் சிவ ராத்திரியில் வெளியிலே(புறத்திலே) இருள் இருக்கும். ஆனால் அகம் விழிப்படைந்து ஒளி பிறக்கும். கும்பத்தில் காற்றை ஒடுக்கி, பரிபூரண தியான நிலையில் பரமேஸவரனைச் சிந்தித்து, அகம் மலர்ந்து, பூரணமாக விகசித்து, பரம் பொருள் என்னும் ஒளியை உணர்வது தான் சிவராத்திரி.
பதி, பசு பாசம்
சிவராத்திரித் தத்துவத்தை பல்வேறு கோணங்களில் விளக்கிக் கொண்டே போகலாம் அதற்கு முடிவில்லை. ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியை வார்த்தைகளின் வரம்பினால் நிர்ணயிக்க முடியாது. ஆனாலும் சைவத் தத்துவம் பதி, பசு, பாசம் என்ற மூன்றினை விளக்குகிறது. பதி -சிவபெருமான். பசு ஜீவாத்மாவாகிய நாம். பாசம் நம்மை இறைவனோடு சேரவிடாமல் தடுக்கும் ஆசைகள். கும்ப ராசி 11 வது ராசி, ஆசைகளைக் குறிக்கும் ராசி. ஆசைகளை, தளைகள் (பாசம்) (Bindings) என்று சொல்லுகின் றோம். ஆசைகள் பசுவாகிய ஜீவாத்மாவை கட்டிப்போட்டு, பிறவிச் சுழலில் தள்ளுகின்றது. அது இருக்கும் வரை பிறவியும் இருக்கும். பிறவியினால் வரும் வினைகளும் இருக்கும். வினைகளினால் வரும் இன்ப துன்பங்களும் இருக்கும். இந்த பாசத்தளையை அறுத்தால், ஜீவாத்மா ஈஸ்வரனோடு இணையலாம். அந்த பாசத்தளையை அறுத்து சிவனோடு ஜீவனைச் சேர்க்கின்ற நாள்தான் சிவராத்திரித் திருநாள். ஜீவாத்மாவை சிவத்தோடு லயப்படுத்தும் சிவராத்திரியைப் போல் ஓர் உன்னத நாள் உண்டோ?
