நாமக்கல், பிப். 16: நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில், அரசு அனுமதி பெற்ற தனியார் பார் தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 8.50 மணியளவில், அங்கு மது அருந்த வந்த சில நபர்கள், கூடுதல் சைடு டிஷ் கேட்டு பாரில் பணியாற்றிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் எச்சரித்து, அசம்பாவிதம் ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை காவல் துறையினருக்கு எந்தவித புகாரும் பெறப்படவில்லை. தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து, அசம்பாவிதம் நடைபெறாமல் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போல, தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகவோ அல்லது வேறு ஏதேனும் சட்ட விதிமீறல்கள் தொடர்பாகவோ புகார்கள் கிடைக்கப்பெற்றால், சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
