திருத்தணி பகுதியில் வாழை இலைகள் விலை இருமடங்கு அதிகரிப்பு: ரூ.500ல் இருந்து ரூ.1200 ஆனது

திருத்தணி: திருத்தணி பகுதியில் வாழை இலைகள் வரத்து குறைந்துள்ளதால், விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, 250 இலைகள் கொண்ட வாழை இலை கட்டி ரூ.500 லிருந்து ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டை பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆந்திர மாநிலம் கூடூர், ராஜம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலைகள், வாழைத்தார்கள் வாகனங்களில் கொண்டு மொத்த விற்பனை மற்றும் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், வாழைத்தார்கள் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், வாழை இலைகள் வரத்து குறைந்துள்ளது.

இதுகுறித்து, அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்த வாழை வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் வரை 250 கட்டு இலைகள் கொண்ட வாழை இலைகள் ரூ.400 முதல் 700 வரை மட்டுமே தோட்டத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். தற்போது, வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு வருவதால், வாழை இலைகள் வரத்து குறைந்துள்ளது. மேலும், சுப முகூர்த்த நாட்கள், சிவராத்திரி விழா என்பதால் வாழை இலைகள் தேவை அதிகரித்து வரத்து குறைந்ததால், விலை திடீரென்று அதிகரித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக 250 இலைகள் கொண்ட கட்டு ரூ.1200 முதல் 1600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாப்பாடு வாழை இலை ரூ.5 க்கும், டிப்பன் இலை ரூ.2க்கு விற்பனை செய்கிறோம். திருமண சுப நிகழ்ச்சிகளுக்கு ஆயிரம் வாழை இலைகள் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் தீவிரம் அடைந்தால் வாழை மரங்கள் காய்ந்து விடும் என்பதால் வாழை இலைகள் விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் தட்டுகளில் உணவு அருந்த பெரும்பாலானோர் விரும்பாததால், ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் பார்த்தால் வேறு ஓட்டல்களுக்கு சென்று விடும் சூழல் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான ஓட்டல்களில் வாழை இலையில் பரிமாறும் நிலை காண முடிகிறது. வாழை இலைகள் மரியாதையின் வெளிப்படையாகவும், சுகாதாரத்தின் அடையாளமாக இருப்பதால் அனைவரும் வாழை இலைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாழை இலைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: