திருவள்ளுர், பிப்.14:திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் எதிரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளுர் புத்தகத் திருவிழா தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரைசந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், வருவாய் கோட்டாச்சியர்கள் திருவள்ளுர் ரவிச்சந்திரன், திருத்தணி கனிமொழி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் வைரவன், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். பிறகு அவர் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் 5வது புத்தக திருவிழா சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. மாணவர்களிடையே புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள் நிறைய புத்தகங்களை படித்து அறிவியல் விண்வெளி ஆராய்ச்சி செயற்கை நுண்ணறிவு ஆகியவைகள் தொடர்பாக அறிந்து புரிந்து உலகின் பல்வேறு இடங்களுக்க சென்று வாழ்க்கையில் சிறப்பான உச்சங்களை அடைய வேண்டும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், கூகுள் நிறுவன செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, இஸ்ரோ, விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வினிதா முத்தையா, முனைவர் சுப்பையா, மு.வீரமுத்துவேல், போன்ற அறிவியல் மேதைகள் போன்று நீங்களும் வாழ்க்கையில் வெற்றிபெற புத்தகங்களை நன்கு பயின்று அதன் பொருள்களை உள்வாங்கி வாழ்க்கையில் சிறப்பான உச்சம் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
இதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அமைச்சர் 115 மகளிருக்கு தலா ரூ.5025 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.5.80 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், பயிற்சி துணை ஆட்சியர் சண்முக பீரித்தா, திருவள்ளூர் எஸ்.பாலாஜி, பூந்தமல்லி உதயம், கும்மிடிப்பூண்டி சுரேஷ் குமார் ஊத்துக்கோட்டை ராஜேஷ் கமார், பொன்னேரி சோமசுந்தரம், ஆர்கே.பேட்டை சரஸ்வதி, ஆவடி கண்ணன் மற்றும் பல்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
