திண்டுக்கல்: நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார். நிலக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நிலக்கோட்டையில் திமுக வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்; மக்களோடு நின்று பணியாற்றக் கூடியவர்கள் திமுக வேட்பாளர்கள். திமுக வேட்பாளர்கள் அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.
சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேச்சை மாற்றி பேசக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுக்கிறது; அதிமுக இதற்கு ஒத்துப்போகிறது. மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கிவிட்டது பாஜக; தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த பாஜக-அதிமுகவை விரட்டியடிப்போம். தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டதால் ஏராளமானோர் பாதிப்பு; நாட்டில் நிலவும் எரிவாயு பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு எதிர்காலம் என்பது கிடையாது. மகளிர் உரிமைத்தொகை 1.31 கோடி மகளிருக்கு வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் மாதந்தோறும் மகளிர் ரூ.900-ஐ சேமித்து வருகின்றனர் என்று கூறினார்.
