திருத்தணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் தலைமையில் குற்றப்பிரிவு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி,பிப்.4:திருத்தணியில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாடின்றி முடங்கி கிடக்கும் குற்றப்பிரிவு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, கனகம்மாசத்திரம், பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் குற்ற செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுற்றுலா நகரமான திருத்தணியில் போதை பொருட்கள் கடத்தல், சமூக விரோத செயல்கள், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பெரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான குற்ற செயல்களுக்கு போதை பழக்கம் தான் அடிப்படை காரணமாக உள்ளது. திருத்தணி நகரம் மற்றும் 27 ஊராட்சிகள் கொண்ட திருத்தணி காவல் நிலைய எல்லைப் பகுதி பெரும்பாலும் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில், பெரும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. குறைந்த அளவில் மட்டுமே உள்ள காவலர்கள் கோயில், தனிப்பிரிவு, ஏஎஸ்பி அலுவலகப் பணி, நீதிமன்றம் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால், குறைந்த அளவில் மட்டுமே உள்ள காவலர்கள் வைத்து குற்ற செயல்களை தடுப்பது என்பது நடக்க நாதியற்றவன் தலையில் பாறாங்கல் வைப்பது போல் உள்ளது. கடந்த காலங்களில் குற்ற செயல்கள் என்பது குறிப்பிடத்தக்க சிலர் மட்டுமே ஈடுபட்ட வந்த நிலையில் இப்போது சிறுவர்கள் பெரும் குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. புதுமையான குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர எல்லை மற்றும் சுற்றுலா நகரமான திருத்தணிக்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு அவசரம் அவசியமாக உள்ளது.

Related Stories: