திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் தங்கம திருட்டு தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், சபரிமலை கோயிலில் மீண்டும் ஆய்வு நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
* புதிய கொடிமரம் அமைத்தது குறித்தும் விசாரிக்க உத்தரவு
சபரிமலையில் கடந்த 2017ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பழைய கொடிமரத்திற்கு சேதம் ஏற்பட்டதாக கூறி புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது குறித்து உடனடி விரிவான விசாரணை நடத்த விஜிலன்சுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டால் சிறப்பு புலனாய்வுக் குழு கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
