*சித்தூர் கலெக்டர் எச்சரிக்கை
சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோழி பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என கலெக்டர் சுமித்குமார் எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அதிகரித்து வருகிறது.
சதும் மண்டலம் பகுதியில் கடந்த சில வாரங்களில் சுமார் 50 ஆயிரம் நாட்டுக்கோழிகள் இறந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிராய்லர் கோழி பண்ணைகளிலும் சுமார் 40 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சதும் மண்டலம் அம்மாகரிப்பள்ளி, கம்பம்வாரிப்பள்ளி மற்றும் புட்டவாரிப்பள்ளி கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன. இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அதிகாரி ரமிலா மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் பலியான கோழிகளின் மாதிரிகளை சேகரித்து விஜயவாடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
இவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு பணியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சித்தூர் கலெக்டர் சுமித்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கோழி பண்ணைகளில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் இறந்து வருகிறது.
இந்நிலையில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் பண்ணைகளை பாதிக்கும் பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக கோழி பண்ணை உரிமையாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கவேண்டும். ஒரு பறவையிடம் இருந்து மற்றொரு பறவைக்கு மட்டுமே பரவுகிறது. இது பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவாது. இருப்பினும் அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான கோழிகள் இறந்துகொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளை தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்பு எண்கள் கால்நடை பராமரிப்புத் துறை 70131 19447 மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 08572 242730 இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதேபோல் பொதுமக்களும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறந்த கோழிகளை யாரும் உட்கொள்ளக் கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.
