? வைணவத்தில் 108 திவ்ய தேசம் என்று சொல்வது எந்தக் கணக்கு? இந்தியாவில் 108 திருமால் ஆலயங்கள்தான் இருக்கிறதா?
– ஜனார்த்தனன், பெங்களூரு.
இந்தியாவில் பல நூறு திருமால் ஆலயங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலே புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும், இந்தியா முழுவதும் 108 திவ்ய தேசங்கள் என்று ஒரு கணக்கு வைணவ சமயத்தில் உண்டு. இதற்கு என்ன காரணம் என்றால், எந்தெந்த திருத்தலங்கள் ஆழ்வார்களால் பாடப் பெற்றதோ அந்தத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் மரபு வைணவத்தில் உண்டு. ஆழ்வார்களால் பாடப்படாத தலங்கள் எத்தனை தான் புராணப் பிரசித்தி பெற்றதாக இருந்தாலும் திவ்யதேச கணக்கில் வராது. ஆழ்வார்கள் பாடிய தமிழ்ப் பாசுரங்கள் அத்தனை பெருமை மிக்கது என்பதுதான் இதில் இருந்து நமக்குத் தெரிகிறது.
?ஆக்னேயம் என்பது எந்த திசை?
– சர்வேஷ்மித்ரன், சைதாப்பேட்டை.
அக்னி மூலைக்கு அதாவது தென்கிழக்கு திசைக்கு ஆக்னேயம் என்று பெயர். வாஸ்து சாஸ்திரப்படி அங்குதான் சமையலறை அமைக்க வேண்டும்.
? ஏழு பிறவி என்று சொல்கிறார்களே அதென்ன ஏழு பிறவி?
– கங்காதரன், கும்பகோணம்.
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் – இதுதான் ஏழு பிறவிகள். இது உயிர்களின் படிநிலை என்பார்கள். மணிவாசகர் திருவாசகத்தில் இந்த விஷயத்தை அற்புதமாகச் சொல்லுகின்றார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
? மகாலட்சுமியின் சகோதரி சந்திரனா?
– ராஜலட்சுமி, தஞ்சாவூர்.
ஆம். ‘‘ஓம் சந்த்ர ஸஹோதர்யை நமஹ” என்று ஒரு திருநாமமே உண்டு. பாற்கடலை கடையும்போது மஹாலட்சுமி தோன்றினாள். அவள் மட்டுமல்ல, சந்திரன், பாரிஜாத மலர், ஐராவதம் போன்ற பிற பொருட்களும் தோன்றின. சந்திரன் பிறப்பின்போது மஹாலஷ்மியும் தோன்றியதால் அவள் சந்திர சகோதரி என்ற திருநாமம் பெற்றாள்.
? இறைவனுக்கு பால்சோறு வைத்துப் படைப்பதில் ஏதாவது தத்துவம் உண்டா?
– முரளிதரன், பம்மல், சென்னை.
பெரும்பாலான கோயில்களில் ஷீரான்னம் எனப்படும் பால் சோறு அர்த்த ஜாம பூஜையில் நிவேதனம் செய்யப்படும். ஒரு நாட்டின் வளமைக்கு அந்த நாட்டில் உள்ள தானிய விருத்தியும், கால்நடை விருத்தியும் முக்கியம். தானிய விருத்திக்குப் பிரதிநிதியாக அரிசியும், கால்நடை விருத்திக்குப் பிரதிநிதியாக பசும் பாலும் எடுத்துக்கொண்டு இரண்டும் கலந்து எம்பெருமானுக்கு ஷீரான்னமாகப் படைப்பார்கள்.
? கோபுர கலசங்களில் வரகு வைப்பதன் தத்துவம் என்ன?
– விஸ்வநாதன், தூத்துக்குடி.
வரகு நீண்ட காலம் கெட்டுவிடாத தானியம் என்பது முதல் காரணம். கோபுரக் கலசங்களில் வரகு உட்பட நவதானியங்கள் நிரப்பப்படுவது, பண்டைய தமிழர்களின் தானிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பு முறை; இயற்கை சீற்றங்கள், படையெடுப்புகள், பஞ்ச காலங்களில் மக்கள் பசியைப் போக்கவும், வேளாண்மை செய்யவும் உதவும் ஒரு பாரம்பரிய நடைமுறை; மேலும், மின்காந்த அலைகளை ஈர்க்கும் பண்புகளுக்காகவும் இந்த தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் ஒரு முக்கிய சடங்காகும்.
? ஆண்டாள் ராமானுஜருக்குத் தங்கை என்று ஒரு சில புத்தகங் களில் படித்தேன், உபன்யாசங்களிலும் கேட்டேன். ஆண்டாள் காலம் வேறு, ராமானுஜர் காலம் வேறு இல்லையா?
– கருணாகரன், அருங்குளம்.
காலங்கள் வேறு வேறாக இருந்தாலும் உணர்வினால் அவர்கள் அண்ணன் தங்கை உறவு. தங்கையினுடைய எண்ணங்களை யார் நிறைவேற்றுகிறாரோ அவர்தானே தமையனாக முடியும். ஆண்டாள் அழகருக்கு நூறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா அக்கார அடிச்சில் சமர்ப்பிக்கிறேன் என்று நேர்ந்து கொண்டாள்.
நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?’
இது வெறும் பாசுரம் என்று ராமானுஜர் நினைக்கவில்லை. ஆண்டாள் இப்படி நினைத்து விட்டாளே, அவளுடைய எண்ணம் உண்மையாக வேண்டுமே என்று, தன்னை ஆண்டாளுக்கு அண்ணனாக நினைத்துக் கொண்டு, 100 அண்டா அக்கார அடிசிலையும் ,வெண்ணெயையும் அழகருக்குச் சமர்ப்பித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.
அப்பொழுது தன்னுடைய மனோரதத்தை இத்தனை ஆண்டு காலம் யாரும் நிறைவேற்றாதபோது, அது வெறும் கவிதைதானே என்று நினைக்காமல் நிஜமாக்கிக் காட்டியதால் அர்ச்சகரை முன்னிட்டு கொண்டு கருவறையில் இருந்து ஒரு அடி முன்னே ‘‘அண்ணா” என்று அழைத்துக் கொண்டு ஆண்டாள் வந்தாள் என்பது வரலாறு. இதை பின்னால் வாழித் திருநாமம் எழுதியவர்கள் ‘‘பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று வாழ்த்துப்பா எழுதி வைத்தார்கள். அதனால் ரஸானுபாவமாக ஆண்டாளுக்கு அண்ணனாக ராமானுஜரைச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
? நவகிரகங்களை இடமாக வலம் (பிரதக்ஷிணம்) வர வேண்டுமா? வலமாக வலம் வர வேண்டுமா?
– நாகராஜன், திருப்பதி.
பொதுவாக இடமிருந்து வலமாகச் சுற்றுவீர்கள். அப்படிச் சுற்றினால் போதும். நாம் இடமிருந்து வலமாகச் சுற்றினால் நமக்கு எதிரே காட்சி தரும் பகவானுக்கு வலமிருந்து இடமாகச் சுற்றியதாக ஆகும். எனவே அப்பிர தட்சணம் வேண்டாம்.
?கொடிமரம் இல்லாத சந்நதிகளில் பகவானை நேராக நின்று சேவிக்கலாமா?
– பாஸ்கரன், மார்த்தாண்டம்.
சாத்திரப்படி எப்பொழுதுமே பகவானுக்கு முன்னால் நிற்கக் கூடாது என்பதற்காகத்தான் கொடிமரம் பலிபீடத்தை வைத்திருக்கிறார்கள். எப்பொழுதும் ஏதாவது ஒரு பக்கமாக நின்று சேவிப்பதுதான் சிறந்தது. மற்றவர்களுக்கு இடையூறும் ஏற்படாது. குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாளை சேவிக்கும் பொழுது அவருடைய திருவடி பக்கம் வரிசையில் நின்று சேவிப்பது சிறப்பு. இதற்கு அர்ஜுன ஸ்தானம் என்று பெயர்.
? எந்த மூர்த்தியை வணங்கினால் கலைகளில் வளர்ச்சி அடையலாம்?
– புருஷோத்தமன், திசையன்விளை.
விடாத பயிற்சியோடும் முயற்சியோடும் நீங்கள் விரும்புகின்ற மூர்த்தியை வணங்கினாலே, உங்களுக்கு கலைகளில் மிகச்சிறந்த வளர்ச்சி கிடைக்கும். அதைவிட, சொல்லித் தந்த குருவை முக்கியமாக வணங்க வேண்டும்.
? பரிகாரங்களிலேயே சிறந்த பரிகாரம் எது?
– செந்தில்நாதன், மதுரை.
மிகவும் சக்தி வாய்ந்த, எல்லோரும் செய்யக்கூடிய, எளிமையான பரிகாரம் கோயில்களிலே விளக்கு போடுவதுதான். அதற்கு நிகரான பரிகாரம் எதுவும் கிடையாது.
? பகவானுக்கும் நமக்கும் ஒன்பது வகையான உறவு இருக்கிறது என்கிறார்களே?
– வாசுகி, பண்ருட்டி.
ஆம். இதை நவவித சம்பந்தம் என்று சொல்வார்கள்.
1. தந்தை மகன்
2. காப்பவன் -காக்கப்படுபவன்
3. தலைவன் -தொண்டன்
4. கணவன் -மனைவி
5. அறியப்படுபவன் -அறிபவன்
6. சொத்துக்குரியன் -சொத்து
7. தாங்குபவன்(ஆதாரம்)-தாங்கப்படுபவன்
8. உயிர் -உடல்
9. அனுபவிக்கிறவன் -அனுபவிக்கப்படும் பொருள்
இதன் விளக்கமாக நவவித சம்பந்தம் என்கிற நூலே இருக்கிறது.
? கோயிலில் பலிபீடம் ஏன் வைத்திருக்கிறார்கள்?
– கார்த்திக், தருமபுரி.
ஆகம விதிப்படி அது அவசியம்.அங்கே பலி சாதிப்பார்கள். உட்கருத்து பார்ப்போம். நாம் என்னதான் பக்தியோடு இருந்தாலும், இந்த (கர்ம) உலகில் இருக்கும் வரை நான், எனது என்கின்ற அகங்கார மமகாரங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத் தோஷங்களோடு இறைவனைச் சென்று வணங்கக் கூடாது. அதனால், கோயிலுக்கு வெளியிலேயே எப்படி நம்முடைய காலணிகளை விட்டுவிட்டு உள்ளே செல்கிறோமோ அதைப்போல நம்முடைய பட்டம், பதவி, செல்வம், போன்ற எல்லா வகையான அகங்கார மமகாரங்களையும் பலி பீடத்தில் பலி கொடுத்துவிட்டு இறைவனை வணங்கச் செல்ல வேண்டும். இதைக் குறிப்பாகச் சொல்வதற்காகத்தான் பலிபீடத்தை வைத்திருக்கிறார்கள். பலிபீடத்தருகே விழுந்து வணங்கும் பொழுது, நான் எதுவுமே இல்லை நீதான் எல்லாம் (I am nothing, You are everything) என்று நினைப்போடு இறைவனை அணுக வேண்டும்.
? நாம் வேண்டிய வரங்களை பகவான் சில நேரங்களில் தருவதில்லையே?
– சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோவில்.
நன்றாக யோசித்துப் பாருங்கள் வேண்டிய வரங்களை பகவான் தந்திருப்பான். வேண்டிய என்பதற்கு நீங்கள் கேட்ட என்று ஒரு பொருளும், உங்களுக்குத் தேவையான என்கிற பொருளும் உண்டு. நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் ஏதோ சில காரணங்களால் பகவான் தராமல் இருந்தாலும் உங்களுக்குத் தேவையானதை கட்டாயமாகத் தந்திருப்பான். நீங்கள் விரும்பியதைத் தராமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்று இறைவன் நினைத்திருக்கலாம் அல்லது நீங்கள் வேண்டியதைத் தந்தால் அதுவே உங்களுக்கு துக்கத்தைத் தந்து விடுமோ என்று இறைவன் நினைத்திருக்கலாம் இறைவன் திருவுள்ளத்தை நம்மால் எப்படி அறிய முடியும்?
தேஜஸ்வி
