சம்சார சாகரத்தை தாண்டுவிக்கும் நாமம்

112. பவாநீ

இந்த நாமம் விசேஷமானதாகவும், கொஞ்சம் பிரபலமாகவும் இருக்கிறது. நிறைய பேர் பவானி என்று பெயர் வைத்துக் கொள்வார்கள். பவ என்றால் சிவன் என்று அர்த்தம். சிவ பெருமானுக்கு எப்படி சிவ என்றொரு நாமம்இருக்கிறதோ, சிவ என்றொரு சப்தம் இருக்கிறதோ, அதுபோன்று சிவ பெருமானுக்கு பவ என்றொரு சப்தம் இருக்கிறது. சிவ என்பதை எப்படிச் சிவன் என்று சொல்கிறோமோ, அதுபோல பவ என்பதை பவன் என்று சொல்லலாம். ஆகவே, பவ என்கிற சப்தத்தினால் சிவன் அழைக்கப்படுகிறார். அப்போது சுவாமிக்கு எப்படி பவ என்று பெயர் இருக்கிறதோ, அதுபோல சுவாமியினுடைய சக்தி சொரூபமான அம்பிகைக்கும் அதேபோல் ஒரு பெயர் வந்து விடும். சுவாமிக்கு பவ என்று பெயர். அம்பாளுக்கு பவாநீ என்று பெயர். இதுபோல சிவ என்கிற நாமத்தையும், சிவா என்கிற நாமத்தையும் பார்த்தோம். சிவா என்பது இதில் அம்பாளுக்குரிய நாமாவாகும். பவாநீ என்றால் பவனுக்கு உரியவள். பவனுடைய பத்தினி என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சிவ, சிவா என்பதுபோல, பவ, பவானி என்பதாகும்.

இந்த சிவ நாமங்களிலேயே பவ என்கிற நாமமானது மிகவும் முக்கியமானது. சைவ ஆகமங்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது, மிகவும் எளிமையாக எட்டு நாமங்களினால் அர்ச்சிப்பது வழக்கம். இந்த எட்டு பேரைச் சொல்லி அர்ச்சித்தாலே போதும். சுவாமி மகிழ்ந்து போவார். அஷ்டநாமாக்கள் என்று பெயர். இந்த எட்டுப் பெயர்களை பவாய தேவாய நமஹ’, ‘சர்வாய தேவாய நமஹ’, ‘ஈசானாய தேவாய நமஹ’, ‘பசுபதேர் தேவாய நமஹ’, ‘ருத்ராய தேவாய நமஹ’, ‘உக்ராய தேவாய நமஹ’, ‘பீமாய தேவாய நமஹ’, ‘மஹதோ தேவாய நமஹ’, என்று எட்டு நாமங்கள் சொல்லி அர்ச்சிப்பார்கள். இந்த எட்டு நாமங்களில் முதல் நாமமே பவாய தேவாய நமஹ என்பதாகும்.

எப்படி ஈசனுக்கு பவ என்கிற நாமம் முக்கியமோ அதேபோல அம்பாளுக்கும் பவானி என்கிற நாமம் முக்கியமானதாகும். இந்த பவ என்கிற சப்தத்திற்கு என்னென்ன பொருளெல்லாம் உண்டு என்று பார்க்க வேண்டும். பவ என்றால் சிவபெருமான். இன்னொரு அர்த்தம் என்னவெனில், நாம் இப்போது இருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கே பவ என்று பெயர். நாம் பவ சாகரம் அதாவது சம்சார சாகரம் என்று சொல்கிறோம் அல்லவா? இதற்கும் பவ என்றுதான் பெயர். இன்னொன்று, பவ ரோகம் என்று சொல்கிறோம். நமக்கெல்லாம் சம்சாரம் என்கிற ரோகம், நோய் வந்திருக்கிறது. அதைத் தீர்ப்பதற்கு பவ என்கிற ஈசன்தான் வர வேண்டும் என்றெல்லாம் வேதங்கள் பிரார்த்திக்கின்றன. சுவாமியான ஈசனுக்கும் பவ என்று பெயர். நாம் இருக்கக் கூடிய இந்த சம்சாரத்திற்கும் பவ என்றுதான் பெயர்.

ஏன் சுவாமிக்கு பவ என்று பெயர்? ஏன் சம்சாரத்திற்கும் பவ என்று பெயரென்றால், சுவாமியிடமிருந்து தான் எல்லாமே உண்டாகியிருக்கிறது. எனவே, பவ என்றால் உண்டாகுவது. தோன்றுதல் என்று பொருள். இப்படி எல்லாமே அவரிடமிருந்து உண்டாவதால் அவருக்கு பவ என்று பெயர். பிரபஞ்சத்திற்கு பவ என்கிற நாமம் ஏன் வந்தது எனில், பிரம்மம் என்று சொல்லக் கூடிய ஒரு வஸ்துவிலிருந்து இது உண்டானதால், இதற்கு பவம் என்று பெயர். இது தன்னால் உண்டாகவில்லை. பிரம்மம் என்கிற வஸ்துவிலிருந்து உண்டாகியிருக்கிறது. எல்லாவவற்றையும் உண்டாக்குகிற சிவத்திற்கு பவ என்று பெயர். அந்த பிரம்மத்திலிருந்து உண்டான பிரபஞ்சத்திற்கும் அதே பவ என்றுதான் பெயர். அப்போது எல்லாவற்றையும் தன்னிலிருந்து உண்டாக்குபவருக்கும் பவ என்றும், அவரிலிருந்து உண்டான இந்த பிரபஞ்சத்திற்கும் பவ என்றுதான் பெயர்.

ஒரு பக்கம் பவ என்பது சுவாமியை குறிக்கும். இன்னொரு பக்கம் பவ என்பது பிரபஞ்சத்தை குறிக்கும். இப்போது சுவாமி என்கிற பவத்திலிருந்து பிரபஞ்சம் என்கிற பவ எப்படி உண்டாயிற்று எனில், யார் மூலமாக உண்டாயிற்றெனில் அது பவாநீ மூலமாக உண்டாயிற்று. இந்த இரண்டுக்கும் அவளே மத்தியஸ்தமாக இருக்கிறாள். இந்தப் பக்கம் பூரண பிரம்மத்திற்கும் சக்தி சொரூபிணீயாக இருக்கிறாள். அந்த பூரண பிரம்மத்திலிருந்து உண்டாகக் கூடிய சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார முதலிய பிரபஞ்ச விவகாரங்களுக்கும் அவளே சக்தியாக இருக்கிறாள். இப்படி இரண்டுக்கும் மத்தியிலிருந்து அபேத சொரூபத்தை காண்பித்துக் கொடுப்பவள், பவாநீ. பிரம்மத்தின் மூலம் பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தின் மூலம் பிரம்மத்தையும் காண்பித்துக் கொடுக்கக் கூடிய ஐக்கிய சொரூபிணீ யாரெனில், பவாநீ.

நமக்கு அப்படியொரு தரிசனத்தை கொடுக்கக் கூடியவளை லலிதா சஹஸ்ரநாமம் சலன் மீனாப லோசனா… என்று சொல்வதை ஏற்கனவே பார்த்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும். இந்த நாமத்தின்படி அம்பாள் ஒரு கண்ணால் சுவாமியையும், இன்னொரு கண்ணால் அவளுடைய குழந்தைகளான நம்மைப் பார்ப்பாள். ஒரே நேரத்தில் பிரம்மமாகிற சிவத்தையும், அந்த பிரம்மத்திலிருந்து வேறுபடாத ஜீவனாகிய நம்மையும் ஒரே நேரத்தில் பார்த்து அருளுபவள் என்று பார்த்தோம். இந்த நாமமும் கிட்டத்தட்ட அதையேதான் சொல்கின்றது. எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கக்கூடிய சிவத்தையும் அவள்தான் இயக்குகிறாள். அந்த பவத்திலிருந்து உண்டான இந்த பிரபஞ்சமாகிய பவத்தையும் அவள்தான் இயக்குகிறாள். இந்த இரண்டையும் இயக்குபவளாக இருப்பதால் அவளுக்கு பவாநீ என்று பெயர்.பவாநீ பற்றிய இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் பார்ப்போம்.

ஆதிசங்கர பகவதபாதர் இயற்றிய சௌந்தரலஹரியில் சுவாரசியமான ஒரு விஷயம் இருக்கிறது. இதை அவர் கவித்துவமாக வடித்திருப்பார். ‘‘பவாநித்வம் தாஸே…’’ என்கிற ஸ்லோகம்தான் அது. இந்த ஸ்லோகத்தில், நாம்போய் அம்பிகையின் முன்பு நிற்கிறோம், அப்படி நிற்கும்போது, பவாநீ என்கிற நாமம் நினைவுக்கு வருகிறது. அப்போது, ‘‘பவாநீ… அம்மா…. த்வம்… நீ … தாஸே… உன்னுடைய தாஸன் நான். என்னை காப்பாற்று… என்னை காத்து நில்’’ என்று இந்த பக்தர் அல்லது குழந்தை இதைத்தான் சொல்லப் போகிறது. நாம் இப்போது மேலே பிரித்துப் பார்த்தோம். ஆனால், சொல்லும்போதே பவாநித்வம் தாஸே… என்றுதான் ஆரம்பிப்போம். அப்படித் தொடங்கும்போது அம்பிகை என்ன நினைப்பாள் தெரியுமா? அம்பிகையினுடைய திருவுள்ளத்தில் என்ன வருமெனில், ‘‘பவாநி நீ’’ என்று அவளுக்கு திருவுள்ளமாகாது. ‘‘பவாநித்வம்’’ என்றால் பவாநியினுடைய நிலை. உதாரணத்திற்கு சர்வக்ஞத்துவம் என்பதில் சர்வக்ஞன் என்றால் எல்லாவற்றையும் அறிதல். ‘‘சர்வக்ஞத்வம்’’ என்றால் எல்லாவற்றையும் அறியக்கூடிய தன்மை. அப்போது இந்த த்வம் சேரும்போது அந்த நிலையை அது குறிக்கிறது. சிவத்வம் என்றால் சிவனுடைய நிலையை அடைவதுதான் சிவத்வம்.
(சுழலும்…)

Related Stories: