*முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்தார்
*கலெக்டர், எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்பு
ஆம்பூர் : மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை 5 ஊராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காணொலியில் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடச்சேரி, பாப்பனபள்ளி, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளி குப்பம், வடகரை ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை போக்க அப்பகுதி மக்கள் எம்எல்ஏ வில்வநாதனிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் வடச்சேரி மற்றும் 17 இதர குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை மாநில அரசின் குறைந்த பட்சதேவைகள் திட்டத்தின் கீழ் அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு இதற்கான பணிகள் துவங்கி முடிவடைந்தன.
இந்நிலையில் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை காணொலி வாயிலாக துவக்கிவைத்தார். ஆம்பூர் அடுத்த பாப்பனபள்ளியில் நடந்த இந்த விழாவுக்கு கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் நித்தியானந்தம் வரவேற்றார். ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாக பொறியாளர் பர்குணன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
பின்னர், மின்மோட்டார் அறையை திறந்து வைத்து கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எம்எல்ஏ வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழுதலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து கலெக்டர் சிவ சவுந்திரவல்லி மின் மோட்டார் சுவிட்சை இயக்கி குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி கிருஷ்ணன், சம்பங்கி, கார்த்திக் ஜவஹர் , ஊராட்சிதலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
