திருப்பதி கலப்பட நெய் விவகாரம் ஒரு நபர் கமிஷன் விசாரணை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த நெய் கலப்பட விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார். இதுதொடர்பாக தலைநகர் அமராவதியில் உள்ள தனது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் ஒருநபர் குழு விசாரிக்கும்.

அனைத்து அறிக்கைகளும் இக்குழுவின் முன் வைக்கப்படும். தவறு செய்த யாரையும் காப்பாற்றும் பேச்சுக்கு இடமில்லை. இந்த விவகாரத்தில் ஒருவரும் தப்ப முடியாது. லட்டு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஐயும் அறிக்கை அளித்துள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை மறைக்க தற்போது எங்கள் கூட்டணி அரசு மீது ஒய்எஸ்ஆர் காங்கிரசார் விமர்சனம் செய்கின்றனர்.

தவறுகளை அவர்கள் செய்துவிட்டு எங்களை மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் செல்லும்போது உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்களும் கையெழுத்திட்டுள்ளார். வேற்று மதத்தினர் தரிசனத்திற்கு வந்தால் உறுதிமொழி கையெழுத்திட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விதி. ஆனால் அதனை ஏற்காமல் ஜெகன்மோகன், ஒவ்வொரு முறையும் கோயிலுக்குள் சென்று வந்துள்ளார். இவ்வாறு கூறினார்.

Related Stories: