பாஜ கூட்டணி பற்றி கவலையில்லை; 50 ஆண்டு அரசியலில் 1 நிமிடத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன்: கே.ஏ.செங்கோட்டையன் குமுறல்

 

கோபி: 50 ஆண்டுகால அரசியலில் 1 நிமிடத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். பாஜ கூட்டணி பற்றி கவலையில்லை என கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவிலில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்து செங்கோட்டையன் பேசியதாவது: 50 ஆண்டுகால அரசியலில் 1 நிமிடத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். கட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்று சொன்னேன்.

இப்போது அனைவரும் இணைய தோப்புக்கரணம் போட்டு கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரையும் இணைக்க கெஞ்சி கொண்டிருக்கின்றனர். இணைய வேண்டும் என சொன்னதற்காக எனக்கு எதற்கு தண்டனை? எத்தனை கூட்டணி வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக- தவெகவுக்கு மட்டுமே போட்டி இருக்கும். பாஜவுடன் உள்ள 10 கட்சி கூட்டணியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி என்ன சிபிஐ அதிகாரியா?
தொடர்ந்து செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்ததால்தான் நடிகரின் கட்சி இன்று இருக்கிறது என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு ‘‘எடப்பாடி பழனிச்சாமி என்ன சிபிஐ அதிகாரியா? உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எடப்பாடி குரல் கொடுப்பதால் என்ன பயன்? சிபிஐ விசாரணை இல்லாமல் போய்விடுமா? 2 முறை சிபிஐ அலுவலகம் சென்று தனது விளக்கத்தை விஜய் அளித்துள்ளார்’ என்றார்.

மேலும், தேர்தலில் போட்டியிட வருகிற 6ம் தேதி கட்சியில் விருப்ப மனு அளிக்க உள்ளேன். முருகன் பக்தி பாடலுக்கு விஜய் ஆடியது, யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை. சலங்கை கட்டி எஸ்.பி.வேலுமணி ஆடவில்லையா?, நயினார் நாகேந்திரன் ஆடவில்லையா? ஆடிக்கொண்டிருப்பவர்களை ஆட வேண்டாம் என்கிறீர்கள், ஆடாதவர்களே ஆடி கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

Related Stories: