தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜ 50 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் உள்ளார். இந்நிலையில், சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தி.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் சத்யா கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேநேரம், எடப்பாடியின் தீவிர பக்தனும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் சுனில் தி.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
2 முக்கிய நபர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், குற்றச்சாட்டு இல்லாத, அதே நேரம் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளவருக்கே சீட் வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. தி.நகர் சத்யா (ப.சத்தியநாராயணன்) தி.நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட செயலாளர் ஆவார். இவர் 2016-2021ல் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தார். இவர் மீது சொத்துக்குவிப்பு மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2023 செப்டம்பரில், சத்யா மற்றும் அவரது மகள் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. 2024 மே மாதத்தில், மேற்கு மாம்பலத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு செய்ததாக தி.நகர் சத்யா மீது மீண்டும் வழக்கு பதியப்பட்டது. இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜனுக்கும், ஆதிராஜாராமுக்கும் இடையில் நடந்த சண்டையில், திடீரென கட்சிக்குள் நுழைந்து மாவட்ட செயலாளர் ஆனார் சத்யா.
பொதுவாக, அமைச்சர்கள் மீதுதான் சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்படும். ஆனால், அமைச்சராக இல்லாத தி.நகர் சத்யா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது தி.நகர் மக்கள் மற்றும் கட்சியின் 2வது கட்ட தலைவர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் கட்சியின் சீனியர்களின் மனம் குளிர நடந்து கொண்டு, தொடர்ந்து செல்வாக்காக இருந்து வந்தார். தி.நகர் சத்யா மீது நில அபகரிப்பு, கமிஷன் என ஏகப்பட்ட புகார்கள் கட்சி தலைமைக்கு வந்துள்ளது. ஆனாலும், மீண்டும் 2021ல் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. எனினும் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதியிடம் சத்யா தோல்வி அடைந்தார்.
அதனால் கட்சி தலைமையும் இவர் மீது அதிருப்தியில் உள்ளது.
இதையடுத்துதான் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் தீவிர பக்தனாக உள்ள அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் டாக்டர் சுனிலை தி.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் சுனில், தி.நகர் தொகுதியை சேர்ந்தவர். தொகுதி மக்களிடம் நல்ல பெயரை எடுத்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் இவர் மீது நம்பிக்கை உள்ளது. இவர் மீது எந்த புகாரும் இல்லை. அதனால், அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், தேர்தல் பணியை இப்போதே டாக்டர் சுனில் தொடங்கி விட்டார்.
