டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் நடைமுறையில் இருந்த பேக்கேஜ் விதிகள் மாற்றப்பட்டு 2026 பிப்ரவரி 2 முதல் சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு ஆண்டிற்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பெண் பயணிகள் 40 கிராம் எடை வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம். ஆண் பயணிகள் 20 கிராம் வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு நகை கொண்டுவந்தால் சுங்கவரி இல்லை. கடந்த காலங்களில் ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்தில் நகை கொண்டு வரலாம் என விதிகள் இருந்தன. 40 கிராமுக்கு அதிகமாக தங்கம் கொண்டு வருவோர் 9% வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் தங்கள் கொண்டு வரும் நகைகள் குறித்த விவரங்களை இந்திய சுங்க அறிவிப்பு படிவத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
