புதுடெல்லி: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதால், இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி, ஆபரணத் துறை மற்றும் தோல் பொருட்கள் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்திருந்தார். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, நிலக்கரி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இந்தியா வாங்க உள்ளதாக தெரிவித்திருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் குறித்து அறிவித்து 36 மணி நேரத்திற்கு மேலாகியும், அதன் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடியின் வற்புறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பு அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், விவசாயப் பொருட்களின் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா பல சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது’ என்று சாடியுள்ளார். முன்னதாக, இந்தியாவில் வேளாண் மற்றும் பால் பண்ணை துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக பாஜக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக குறைந்தது 3 முக்கிய காரணங்களுக்காக பிரதமர் மோடி பிடிவாதம் காட்டி அறிவிக்கச் செய்ததாக ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இந்தியா என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்யப் போகிறது என்பது குறித்த துல்லியமான புள்ளி விவரங்கள் மறைக்கப்படுவதாகவும், இது நமது நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
