×

சென்னை கொளத்தூரில் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.02.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் அவ்வளாகத்தில் 6 நியாய விலைக் கடைகள், கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை திறந்து வைத்தார். மேலும், வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இம்மையத்தின் தரைத்தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலைக் கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலைக் கடை என 6 நியாய விலைக் கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்;

முதல் தளத்தில் பிஸியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற் சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் செயற்கை மூட்டு (கை/கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள், மூன்றாம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான 15 படுக்கை வசதிகள், மின்தூக்கி மற்றும் கழிப்பறைகள், நான்காம் தளத்தில் மருத்துவ ஆலோசனை அறைகள், நோயாளிகள் காத்திருப்பு அறை, பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அருந்தும் இடம், மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

6 நியாய விலைக் கடைகள் திறப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 நியாய விலைக் கடைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா திறப்பு
கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இப்பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை பாதுகாப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kolathur, Chennai ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Agaram, Jeganathan Street ,Kolathur Assembly Constituency ,Kolathur Municipal Development Group ,
× RELATED பீகார் தம்பதி, குழந்தையின் உடல்களை...