மேல்மருவத்தூர்: செய்யூர், வந்தவாசி சாலையில் சோத்துபாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது. தென்மாவட்டங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் மதுராந்தகம் நகர பகுதிக்குள் பகல் நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இதன்காரணமாக அனைத்து வாகனங்களும் சோத்துப்பாக்கம் சாலை வழியாக ரயில்வே கேட்டை கடந்து செய்யூர், சித்தாமூர் வழியாக இசிஆர் சாலைக்கு சென்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அவசர தேவைகளுக்காக செல்கின்றவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ரயில் கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் ரூ.31.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் மேம்பால பணிகளை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன்பிறகு கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், மேம்பால பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ந நடைபெற்றது. அப்போது அவர்கள் கையில் செங்கல்லுடன் ரயில்வே கேட் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேல்மருவத்தூர் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘’வாக்குறுதி அளித்தப்படி மேம்பால கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். தினமும் ரயில்வே கேட் மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் மு.பிரதாப் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
