அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரத்தநாடு தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு

 

சென்னை: ஜனவரி 21ம் தேதி முதல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரத்தநாடு தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களாக இருவரும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

அதேசமயம், அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவதா? திமுக அணியில் இடம்பெறுவதா? தவெக கூட்டணியில் இடம்பெறுவதா? தனிக் கட்சி தொடங்குவதா? என்பதில் ஓபிஎஸ் அணி குழப்பத்தில் இருந்து வருகிறது.

இதனால் ஓபிஎஸ் அணியில் அதிருப்தி அடைந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர், அவர் தமது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்.எல்.ஏ பழனி சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் அண்மையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இந்தநிலையில் அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரத்தநாடு தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். வைத்திலிங்கத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்துள்ளது.

Related Stories: