வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது. ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. வழக்கமாக 44.1 செ.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 42.7செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை 10 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை முழுவதுமாக விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (19-01-2026) விலகியது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-01-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (19-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (20-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: