- பொங்கல் திருவிழா
- பிரதமர் மோடி
- தில்லி
- மோடி
- பிரதி அமைச்சர்
- யூனியன் துறை
- தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்
- எல்.முருகன்
டெல்லி : தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது. இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது. தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவம், வேளாண்மையை போற்றுகின்ற சிறப்பான பண்டிகைதான் பொங்கல். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.
விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது. தமிழ் கலாச்சாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றப்படுகின்றனர். விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள். உங்களோடு பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வேளாண்மையை நிலைத்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதே ஒன்றிய அரசின் திட்டம். வேளாண் குடிமக்களின் கரங்களை பலப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.”இவ்வாறு தெரிவித்தார்.
