×

கேரளாவில் ஒரு மாவட்டத்தையும் விட்டு வைக்கல 20 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை மர்ம ஆசாமி பறித்துச் சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த பாகுலேயன் (56) தான் திருட்டில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் பாகுலேயன் போலீசாரின் வலையில் சிக்கினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருட்டு மட்டுமல்லாமல் கேரளா முழுவதும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அவருக்கு மனைவிகள் உள்ளனர்.

மேலும் பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடி வந்துள்ளார். பாகுலேயன் மீது 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் தனது பெயரை மாற்றி மாற்றி கூறிவந்துள்ளார். தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என்று ஏராளமான பெயர்கள் இவருக்கு உள்ளன. கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 20 பெண்களை பாகுலேயன் திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு போலீசார் பாகுலேயனை ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kalyana ,Kerala ,Thiruvananthapuram ,King Kalyana ,
× RELATED சனாதன தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு...