சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கை 2025ன்படி 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை மாற்றியமைத்தல் பணியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செய்து வருகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர்குழு உறுப்பினர்களுக்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் 24ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.
இதை தொடர்ந்து, கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் கலைத்திட்ட உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த டிசம்பர் 11ம் தேதி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வரைவுப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக இணையதளத்தில் கடந்த 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இப்பாடத்திட்டங்களுக்கான பின்னூட்டங்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தினை உருவாக்குதல் சார்ந்த கருத்துகளையும் பங்கேற்பாளர்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கு மண்டல அளவில் 38 மாவட்டங்களை 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட (சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு) சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள சீமெட் கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் செயலாளர் சந்தரமோகன் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறை கலைத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் 21ம் நூற்றாண்டிற்கான திறன்களை பெறும் வகையில் உருவாக்கிட வேண்டும், மாணவர்களின் வயதுக்கேற்ற வகையிலும், மாணவர்கள் விரும்பும் வகையிலும் அமைய வேண்டும். கலைத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பாடத்திட்டம் உருவாக்கிடும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார்.
மேலும், கலைத்திட்ட வடிவமைப்பு குழு உறுப்பினர்களான உமா ராமன், சந்தனதேவன், மணியம் செல்வன் அலுவல் சாரா உறுப்பினர்களான லதா, இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நரேஷ், இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சசிகலா, இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த இணை இயக்குநர்கள் மற்றும் 4 மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அலுவலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆக மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இவை அனைத்தும் பாடத்திட்டம் இறுதி செய்யப்படும் போது பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
