புதுடெல்லி: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் முதலில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தனிநீதிபதி, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க சென்சார்போர்டுக்கு உத்தரவிட்டார்.
சென்சார்போர்டு சார்பில் உடனடியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் தொடர்பான சிக்கல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மற்றும் சென்சார்போர்டின் நடவடிக்கை ஆகியவைக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
மேலும் இதனை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும், நிறுவனத்தின் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
