ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி, காடை பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து கேரளா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு அடிக்கடி எச் 1, என் 1 பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான வாத்து, கோழிகள் உள்பட பறவைகள் திடீரென செத்து விழுந்தன.

அதைத்தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த சில தினங்களாக ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா, கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள கோழி, வாத்து, காடை பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து இங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து பறவை இறைச்சி, முட்டை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: