பெரம்பலூர், ஜன. 8: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் 3வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி முதல் சம வேலைக்கு சமஊதியம் வழங்கிடக்கோரி சென்னையில் ஊதிய மீட்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, 5ம் தேதி முதல் சென்னை மட்டுமன்றி அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டமாக நடத்தத்திட்டமிடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு 5ம் தேதி பெரம்பலூர் மாவட்ட இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடங்கிய காத்திருப்புப் போராட்டம், நேற்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தேவ கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட துணைத் தலைவர் கோதண்டராமன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.
