பாடாலூர், ஏப்.1: ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. இதில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தலைமை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை (பொ) திலகவதி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கோமதி, துணைத் தலைவர் அம்சவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் அசோக் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி ஆண்டு விழாவின் ஆண்டறிக்கையை ஆசிரியை சாந்தி வாசித்தார். சக பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முருகன், தண்டபாணி, மகேஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் கண் கவர் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற்றது. விழாவில் முன்னாள் ஆசிரியர் அறிவுடைநம்பி, தன்னார்வலர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தன்னார்வலர் ரேகா, பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர், பள்ளி தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நன்றியுரை ஆசிரியை சூடாமணி வாசித்தார்.
