×

ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை: இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசமைப்புச் சட்டப்படி சாதி, மத, இனத்தின் அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்று அடிப்படை உரிமைகள் கூறுகிறது. அதை மீறுகிற வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிற மோடி தலைமையிலான பா.ஜ.க.வினரின் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்து வருகின்றன.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு நியாய விலை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கிற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது. இதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாள்தோறும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர் இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதனால், மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

2026 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi ,Selvaperundhakai ,New Year's Day ,Chennai ,Congress ,state president ,India ,
× RELATED தொடர் விடுமுறை, புத்தாண்டு...