×

சிறை கைதிகள் முன்கூட்டி விடுதலை, தண்டனை குறைப்பு செய்யும் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மற்றும் தண்டனை குறைப்பது குறித்த அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு அமைச்சரவையின் முடிவை ஆளுநர் செயல்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் நிராகரித்தார்.

இதேபோல முன்கூட்டி விடுதலை குறித்த அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது தவறு என்று உத்தரவிட்டது.
இதேபோன்ற வேறு சில வழக்குகளில் அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஒரே விவகாரத்தில் இரு வேறு தீர்வுகள் காணப்பட்டதால், அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ உள்ள அதிகாரம் தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பஞ்சாப் மாநிலத்தின் சாம்சர் சிங் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் மாரு ராம் என்பவரது வழக்கில் அரசமைப்பு அமர்வும் இந்த விஷயத்தில் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ஆளுநர் என்பவர் மாநிலத்தின் அலுவல் முறை தலைவர்தான். அவருக்கு மாநிலத்தின் செயல்பாடுகள் மீதான அதிகாரம் இருந்தாலும் மாநிலத்தின் அமைச்சரவையின் முடிவின்படியே அவர் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பேரறிவாளனை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரிய தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாரு ராம் வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே விடுதலை கோரிய பேரறிவாளன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, முன்கூட்டி விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு குறித்த அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதால் அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Tags : Court ,Chennai ,Madras High Court ,Chidambaram… ,
× RELATED ஐபிஎல் லீக் போட்டிகளை காணவரும்...