ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு பரமபதவாசலை கடந்து சென்ற நம்பெருமாள்: ‘கோவிந்தா… ரங்கா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. ‘கோவிந்தா, கோவிந்தா’.. ‘ரங்கா, ரங்கா’.. என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

மறுநாள் பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10ம் திருநாளான நேற்றுமுன்தினம் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன் தொடர்ச்சியாக ராப்பத்து திருவாய்மொழி திருநாள் நேற்று (30ம்தேதி) முதல் தொடங்கியது. ராப்பத்து முதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார். 2ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3ம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருகை தந்தார்.

அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து சென்றார். அப்போது ‘கோவிந்தா கோவிந்தா’ … ‘ரங்கா ரங்கா’.. என கோஷம் விண்ணதிர பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்தனர். பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்தார். அங்கு பெருமாள் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அதன்பின் சாதரா மரியாதையாகி (பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசலை கடந்து வந்து மூலவரை தரிசனம் செய்தனர். ஆயிரங்கால் மண்டபத்தில் நள்ளிரவு வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்பெருமாளை தரிசிக்கவும், சொர்க்கவாசலை கடக்கவும் ஏராளமான பக்தர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே கோயிலில் குவிந்தனர். நேற்றும் பகலில் கூட்டம் அதிகரித்தது. இவர்கள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் இரவு படுத்திருந்தனர். பக்தர்கள் விடிய, விடிய பரமபதம் விளையாடி, பஜனை பாடல்களை பாடினர். அதிகாலை கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சொர்க்கவாசலை கடந்து தரிசனம் செய்தனர்.

* இந்தாண்டில் 2 முறை சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா 2024 டிசம்பர் 30ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 10-1-25ல் நடந்தது. இந்தாண்டு கடந்த 19ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதாவது இந்தாண்டில் 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்கவாசல் தொடர்ந்து 9 நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தருவார். ஜனவரி 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Related Stories: