சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, வந்தே பாரத் ரயிலில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மறு மார்க்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7.45 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் காலை 10.20 மணிக்கு பதிலாக காலை 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1.45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது 1.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2.45 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இனி 15 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7.15 மணிக்கு புறப்படும். இரவு 8.10 மணிக்கு எழும்பூரில் இருந்து செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், இனி 35 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7.35 மணிக்கு புறப்படும். இரவு 7.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இனி 8.35 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் இனி 8.50 மணிக்கு புறப்படும். அதேபோன்று, தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் மாலை 5.50 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு புறப்படும்.
செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மாலை 6.45 மணிக்கு பதிலாக 6.50 மணிக்கு புறப்படும். திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும்.
