டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மத்திய கலால் திருத்த மசோதா விரைவில் சட்டமாகவுள்ள நிலையில், சிகரெட்டுகளின் விலை 3 மடங்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது 28% சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மீது கலால் வரி விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் இரு அவைகளிலும் நிறைவேறியது. புகையிலை நுகர்வை குறைக்கும் அதே நேரத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும் இந்த வரி விதிப்பு கொண்டுவரப்பட்டது.
இந்த கலால் திருத்த மசோதா சட்டமானால் புகையிலை பொருட்கள் மீது 60% சதவீதம் முதல் 70% சதவீதம் வரை வரி உயர்த்தப்படும். அதாவது 1000 சிகெரெட்டுகளுக்கு ரூ.2,700 முதல் அதிகபட்சமாக ரூ.11,000 வரை வரி உயர்த்தப்பட இருக்கிறது. மெல்லும் புகையிலை பொருட்களுக்கான வரியும் 25% சதவீதத்தில் இருந்து 100% சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. ஹூக்கா புகையிலைக்கான வரி 25% சதவீதத்தில் இருந்து 40% சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கான வரி 60% சதவீதத்தில் இருந்து 325%சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. மொத்தத்தில் 5மடங்கு வரை வரி உயர்வதால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான விலை கணிசமான உயர இருக்கிறது. சிகரெட் நீளம் மற்றும் அதன் வகைக்கு ஏற்ப விலையும் இருக்கும் என்று தகவல் கூறுகின்றனர். இந்த விலை உயர்வால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள புகை பிடிக்கும் பழக்கம் கணிசமான குறையும் என்றும் சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
