தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், திருவிக. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடந்த 100 நாட்களுக்கு மேலாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று காலை பாரிமுனை குறளகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீரென குறளகம் சந்திப்பு, என்எஸ்சி போஸ் சாலை, உயர்நீதிமன்றம் ஆவின் கேட், ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியதால் சாலை மறியல் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
