செங்கோட்டை: அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். கேரளாவில் உள்ள ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சி புரிவதாக ஐதீகம். கேரளாவில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாட்கள் திருவிழா நடப்பது சபரிமலையிலும், அச்சன்கோவிலிலும் மட்டும்தான். இக்கோயிலில் ஆண்டுதோறும் மஹோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்தாண்டு மஹோற்சவ திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து முதல் மூன்று நாட்கள் உற்சவ வாரி திருவிழா, 4ம் நாள் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 5, 6 மற்றும் 7ம் நாளில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும் நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு நெய் அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. 9ம் நாளான நேற்று மஹோற்சவ திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தர்மசாஸ்தா ஆபரணங்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் உலா வந்து கோயில் முன் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை நான்கு புறமும் கட்டி தேர் இழுக்கப்பட்டது.
தேருக்கு முன் ஐயப்பனின் தங்கவாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 1 மணிக்கு கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. தேர் நிலையை வந்தடைந்ததும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 9 மணி முதல் கலை நிகழ்ச்சி, சப்பர உலா, பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக, கேரளவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இன்று காலையில் ஆராட்டு விழா, நிறைவு திருவிழா நடக்கிறது.
