- ராமதாஸ்
- சேலம்
- பாலமகா
- பொதுச் சபை
- அன்புமணி கட்சி
- சென்னை
- பாளமகா ஊராட்சி
- அன்புமணி
- மாநில சிறப்பு பணிக்குழு
- பொதுக்குழு
சென்னை: சேலத்தில் வரும் 29ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என அன்புமணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வரும் 29ம் தேதி சேலத்தில் மாநில சிறப்பு செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு பாமக தலைவர் அன்புமணி தரப்பில் வெளியிடவில்லை என விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29ம் தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.
எனவே, சேலத்தில் 29ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
