கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

சமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன? அதை எப்படி உறுதிப்படுத்துவது?
– கே.குமரவேல், ஊட்டி.

ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, சைனஸ், இருமல், காய்ச்சல் போன்ற குறிப்பிட்ட உடல் உபாதைகளின் அறிகுறியாகத்தான் தலைவலி வெளிப்படும். பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து சரிசெய்தால், சில நாட்களில் தலைவலி சரியாகிவிடும். ஆனால், ஒற்றைத் தலைவலி என்பது தொடர்ச்சியாக நீண்டநாட்களுக்கு இருக்கும்; ஒரு பக்கம் மட்டுமே தலை வலிக்கும்; வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் தொடர்ச்சியாக இருக்கும்.

பரிசோதனைகளின் மூலம் இதை உறுதிசெய்ய முடியாது. அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உறுதிப்படுத்த முடியும். ஒற்றைத் தலைவலி, குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சூழலில், ஏதாவது ஒரு தூண்டுதலின் அடிப்படையில் வரக்கூடியது. உதாரணமாக உணவுப் பழக்கம், மொபைல் பயன்படுத்துவது, தூக்கமின்மை, இரைச்சல், மன அழுத்தம் போன்றவை.

இவற்றில் உங்களுக்கான தூண்டுதல் எது என்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவர்களிடம் தெரிவித்து அதற்கேற்ப சிகிச்சைகள் பெற்றுக்கொள்வது நல்லது.

கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் சோர்வும் கால்வலியும் அதிகமாக இருக்கின்றன. ஒரேநிலையில் 10 நிமிடங்கள் உட்கார்ந்தால்கூட வலி எடுக்கிறது. கால் மூட்டுக்கு அருகே நரம்புகள் புடைத்திருக்கின்றன. இவை ஏதேனும் பிரச்னையின் அறிகுறிகளா?
– ஆர்.பாலாம்பாள், நாகப்பட்டினம்.

“கால் மூட்டுக்கு அருகே நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தால், அது `வெரிகோஸ் வெயின்ஸ்’ (Varicose Veins) பிரச்னையாக இருக்கலாம். இது ஏற்பட மூன்று காரணங்கள் உள்ளன.

*நின்றுகொண்டே வேலை செய்யும்போது உடல் எடை, கால்களில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதால் ஏற்படலாம்.

*உடல் எடை திடீரென அதிகரிப்பதால், கால் நரம்புகளின் செயல்பாடுகளில் பிரச்னை உண்டாவதால் பாதிப்பு ஏற்படலாம். பெரும்பாலும், பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

*காலில் ஏதேனும் அடிபட்டு தீவிர உள்காயம் ஏற்பட்டால் இந்தப் பிரச்னை வரலாம். நரம்பு வெளியே தெரிவது வெரிக்கோஸ் வெயின்ஸ் பிரச்னையின் முக்கிய அறிகுறி. எனவே, அலட்சியப்படுத்தாமல் முறையான சிகிச்சை மேற்கொள்ளுங்கள். சத்துக்குறைபாடு இருந்தால், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்பேரில் உணவு முறையை மாற்றிக்கொள்ளவும்.’’

எனக்கு அல்சர் பிரச்னை இருக்கிறது. டீ குடித்தால் அல்சர் அதிகமாகும் என்கிறார்களே, உண்மையா… அந்தப் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. சிலர், ‘ஸ்ட்ராங்கா இல்லாம, லைட் டீயா குடிச்சா பிரச்னை வராது’ என்கிறார்கள். அப்படிக் குடித்தால் பிரச்னை இல்லையா?
– டி.ஜோசப் இருதயராஜ், சேலம்.

அல்சரைப் பொறுத்தவரை, `ஹெச்.பைலோரி’ (H.Pylori) கிருமியால் பாதிப்புக்குள்ளானவர்கள், டீ – காபி அதிகம் அருந்துவது, புகை மற்றும் மதுப்பழக்கம், வலி நிவாரண மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இருவகை உண்டு. வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் அல்சர் ஏற்பட்டால் அதற்கேற்ப உணவுப் பழக்கங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

`ஹெச்.பைலோரி’ கிருமியின் காரணமாக அல்சர் வந்திருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அல்சர் நோயாளிகள் மட்டுமன்றி யாராக இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு மூன்று கப் டீ அல்லது காபி அருந்தலாம். அதற்குமேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?
– கு.சீராளன், சின்னமனூர்.

சாதாரணமாக நோய்த்தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்கள் சிலவற்றால் சருமத்தில் சிவந்த தடிப்பு, கொப்பளம் ஏற்படலாம் அல்லது சருமம் சிவப்பு நிறத்தில் மாறலாம். பொதுவாக அம்மை வெயில் காலத்தில்தான் அதிகம் பரவும். வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் கொப்பளங்கள், வேனல் கட்டிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அம்மைநோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மறுபடியும் அம்மை நோய் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் கொப்பளங்கள் வந்தாலே அது அம்மை என முடிவெடுத்துவிடக் கூடாது. சருமப் பிரச்னையின் காரணமாகவும் சிவந்த திட்டுகளும், முகத்தில் கொப்பளங்களும் வரக்கூடும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதும். அம்மை என்று நினைத்து நீங்களாக சிகிச்சையில் இறங்க வேண்டாம்.

என் மனைவிக்கு 35 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு ஊழியர். அவள் தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறாள். கேட்டால், தூக்கம் வரவில்லை என்கிறாள். இதற்குக் காரணம் என்ன?
– எஸ்.ராஜநாயகம், திருப்பூர்.

மன அழுத்தத்தால், இப்படியான தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். நல்ல உறக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதால், இந்தப் பிரச்னையை தட்டிக் கழிக்க வேண்டாம். தூக்கத்துக்கான வழிமுறைகளை சரியாகப் பின்பற்றச் சொல்லுங்கள். உதாரணமாக தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தூக்கத்துக்கான நேரத்தை நெறிப்படுத்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடவேண்டியது அவசியம். இரவு உணவை, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே முடித்துக்கொள்ளவும். படுக்கையில் மொபைல், லேப்டாப், மூக்குக்கண்ணாடி போன்றவை இல்லாமலிருப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை தூரமாக வைத்துவிடவும்.

தூங்கும்போது, ஒருபக்கமாகச் சாய்ந்து படுக்காமல், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி மல்லாக்கப் படுப்பது நல்லது. 40 வயது பெண் என்பதால், அவர் தற்போது மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடும். மெனோபாஸ் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புகள் குறையத் தொடங்கும்.

உடலுக்குத் தூக்கத்தை கொடுக்கும் அடிப்படை ஹார்மோன்களான இவை குறைவதால்கூட தூக்கமின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

எனக்கு 25 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பிரீயட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது… இதற்கு என்ன தீர்வு?
– பூ.வாணிஸ்ரீ, கோவை.

முதலில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்து பீரியட்ஸ் சரியாக வராததன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் இரண்டு மாதங்கள் வரையில் பிரீயட்ஸ் வராமல் இருக்கலாம். அதற்கு மேல் வரவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடனடியாக மாத்திரை உட்கொண்டு பிரீயட்ஸ் வரவைத்துவிட வேண்டும்.

நான்கு, ஐந்து மாதங்கள் வரையெல்லாம் காத்திருக்கக் கூடாது. பதினைந்து நாட்கள் வரையில் பிரீயட்ஸ் வருகிறதெனில், மருத்துவரை அணுகி ரத்தப்போக்கை நிறுத்த மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதீத ரத்தப் போக்கினாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உடனடியாக உங்கள் கைனகாலஜி மருத்துவரை நாடி அவசியமான பரிசோதனைகள் செய்துகொண்டு சிசிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.

Related Stories: