போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை அம்பத்தூர் சிடிஎச் சாலையில் ஆவடி ஆணையர் சங்கர் ஆய்வு

 

அம்பத்தூர்: சென்னை பாடி மேம்பாலம் முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. சிடிஎச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையைக் கடப்பதற்குகூட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்றிரவு ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் சிடிஎச் சாலையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணிகளில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின்போது பாடி முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரையிலான சிடிஎச் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் குறித்தும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நிரந்தரமாக 20க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் கி.சங்கர் அறிவுறுத்தினார். அப்போது கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி உள்பட பலர் இருந்தனர்.

 

Related Stories: