×

மூணாறு சாலை 9/6 செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் யானை கூட்டம் நடமாட்டம்

உடுமலை : உடுமலை- மூணாறு சாலையில் 9/6 செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், அமராவதி நகர் 9/6 செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி, உடுமலை வனச்சரகங்கள் உள்ளன.

வனத்தில் ஏராளமான யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, கரடிகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக, மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம்.

கோடை காலத்தில் யானைகள் இடம்பெயர்வது அதிகளவில் இருக்கும். மழைக்காலங்களில் வனத்திலேயே குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும்.

பெரும்பாலும் 9/6 செக்போஸ்டுக்கும், சின்னாறு செக்போஸ்டுக்கும் இடையே உள்ள 13 கிமீ., தூரத்தில் ஏழுமலையான் கோயில் பிரிவு, காமனூத்துபள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக 9/6 செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் பாறையில் 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. சாலையில் இருந்து பார்க்கும்போது யானைகள் நிற்பது தெளிவாக தெரிகிறது. இதனால் அவ்வழியே வாகனத்தில் செல்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி யானை கூட்டத்தை ரசிக்கின்றனர். போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

யானைகள் சாலை பகுதிக்கு வராமல் வனத்துறையினர் அடர் வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டம் பிரதான சாலைக்கு வர வாய்ப்புள்ளது. யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்க கூடாது. வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்க கூடாது. தானாக யானைகள் இடம்பெயர்ந்துவிடும்” என்றனர்.

Tags : 9/6 Checkpost ,Munaru Road ,Udumalai ,9/6 ,Udumala-Munaru Road ,UDUMALA ,MUNARU, AMRAVATI NAGAR ,CHINNARU ,AMRAVATI ,UDUMALI ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி