புவனேஸ்வர்: ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியாவுக்கு, ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மோகிம் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், 5 பக்கம் கொண்ட கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால், இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மோகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறுகையில்,’ கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக முகமது மோகிம் நீக்கப்பட்டார். அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்மொழிவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வருத்தம் இல்லை
முகமது மோகிம் கூறுகையில்,‘சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதற்கும், பொருத்தமான பிரச்னைகளை எழுப்பியதற்கும் என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர், ஆனால் நான் முழு மனதுடன் பின்பற்றும் காங்கிரஸ் சித்தாந்தத்திலிருந்து என்னை அவர்களால் பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
