மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
