×

சேத்தியாத்தோப்பில் அரசு பஸ்சை செல்லவிடாமல் அடாவடி செய்யும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள்

*வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் அடிக்கடி தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்களாலேயே போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டு சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி விஜி குமார் மற்றும் போலீசார் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு கருதி பேரி கார்டுகளை அமைத்து சரி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பேரி கார்டுகளை தாண்டி சென்று தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நேரம் நின்றதால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

நீண்ட நேரம் வேண்டுமென்றே தனியார் பேருந்து ஓட்டுனர் தேசிய நெடுஞ்சாலை நடுவே நிறுத்தியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தால் பல பேருந்துகள் செல்ல முடியாமல் தவித்தன. சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் செய்யும் அடாவடித்தனங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், மற்ற பேருந்துகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் போவதற்கும் காரணமான தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Sethiathope ,Rajiv Gandhi Statue ,Sethiathope, Cuddalore district… ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!