×

‘நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்’ பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேச்சால் அதிமுக – பாஜ கூட்டணியில் சலசலப்பு

சென்னை: சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம்மை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நம்மோடு உறவாடிக் கொண்டு இருப்பவர்களும் இதில் இருக்கிறார்கள். நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

அப்படி இனம் கண்ட காரணத்தில்தான், பல்வேறு சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள் தீட்டினாலும் அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் என இத்தனையையும் முறியடித்து இந்தக் கட்சியை நிலைநிறுத்தி, அதிமுகவை எவராலும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார். இதே நிலைமை அதிமுகவிற்கு வந்த நிலை, வேறு கட்சிக்கு வந்து இருந்தால் நிலைமை என்ன? ஆனால் இப்படிப்பட்ட இயக்கத்தை சில ஊடகங்கள், பத்திரிகைகளில் ‘கணிப்பு’ என்ற பெயரில் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 100 நாள் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மன உறுதியை குலைப்பதற்கு, அதிமுக தொண்டர்களின் மன உறுதியை குலைக்க மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ‘நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று பாஜ மற்றும் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சி.வி.சண்முகம் பேசி இருப்பது அதிமுக – பாஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கட்சியை சாய்த்துவிட முடியாது
முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு பின் புதையலாய் எழுந்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இதே மேடையில் ஜெயலலிதா நடந்து வந்ததை எண்ணிப் பார்க்கிறேன். உலகிற்கு தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது. நம் அசைவை கவனித்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : CV ,Shanmugam ,AIADMK ,BJP ,Chennai ,Vanagaram, Chennai ,Rajya Sabha ,former ,minister ,CV Shanmugam ,
× RELATED திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்: அதிமுக மாவட்ட செயலாளர் மிரட்டல்