*மத்திய இணையமைச்சர் காணொலி மூலம் தொடங்கினார்
திருமலை : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று திருப்பதி-சீரடி இடையே புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே இணையமைச்சர் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பதியில் இருந்து சாய்நகர் சீரடிக்கு ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா வழியாக 2 ஆன்மீக நகரங்களை இணைக்கும்வகையில் புதிய ரயில் சேவை தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. இதனை டெல்லியில் இருந்தபடி மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து திருப்பதியில் நடந்த தொடக்க விழாவில் தென்மத்திய ரயில்வே பொதுமேலாளர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா, ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர் பி.சி.ஜனார்தனன், கலெக்டர் வெங்கடேஸ்வர், ஆரணி ஸ்ரீனிவாசுலு எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, துணைமேயர் முனிகிருஷ்ணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
17425 என்ற எண் கொண்ட ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.23 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், சிராளா, தெனாலி, குண்டூர் வழியாக தெலங்கானா மாநிலத்தில் மிரியாளகூடாவில் இருந்து செகந்திராபாத் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் சாய்நகர் சீரடிக்கு திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு சென்றடையும். இதேரயில் 17426 என்ற எண்ணுடன் சீரடியில் இருந்து திங்கட்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 1.30 திருப்பதிக்கு வந்து சேரும்.
இதுகுறித்து அமைச்சர் பி.சி.ஜனார்த்தன் பேசியதாவது : ஏற்கனவே ஒரு ரயில் இந்த மார்க்கத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் கோரிக்கையின்படி முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி இதே வழித்தடத்தில் மேலும் ஒரு புதிய ரயில்சேவை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
பயணிகள் கூட்டத்தை வைத்து வருங்காலத்தில் தினசரி ரயிலாக மாற்ற பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் ரயில்வே திட்டங்களுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உடனுக்குடன் நில சேகரிப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் ரூ.36,000 கோடி திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் ரூ.6,700 கோடியில் திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு ரயில்வே பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
